ராஜ்யசபா எம்.பி. ஆனார் கனிமொழி6 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது
சென்னை:தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட்ட கவிஞர் கனிமொழி உள்ளிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆறு பேருக்கும் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த 6 பேரின் பதவிக்காலம் முடிந்ததால் அவர்களுக்குப் பதில் புதிதாக 6 பேரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் பி.எஸ்.ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோரும், அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், இளவரசன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சுயேச்சையாக பத்மராஜன் மட்டும் மனு தாக்கல் செய்தார். மனுக்கள் பரிசீலனையின்போது பத்மராஜன் மனு நிராகரிக்கப்பட்டது. மற்ற 6 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்ன. இதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
நேற்று மாலைக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதற்கான அவகாசம் முடிந்ததும், கனிமொழி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியான தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து ஆறு பேருக்கும் அவரவருக்குரிய வெற்றிச் சான்றிதழை நரேஷ்குப்தா வழங்கினார். இதைத் தொடர்ந்து கனிமொழியுடன் வந்திருந்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து கொடுத்தனர்.
மற்ற எம்.பிக்களுக்கும், அவரவர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களை நரேஷ்குப்தாவுடன் சேர்த்து நிற்க வைத்து புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்கள் கோரினர். திமுக கூட்டணி எம்.பிக்கள் இதற்கு உடன்பட்டனர். ஆனால் அதிமுக எம்.பிக்கள் அதை நிராகரித்து விட்டு கிளம்பி விட்டனர்.












Click it and Unblock the Notifications