ராணுவம்-விடுதலைப் புலிகள் கடும் சண்டை30 புலிகள் பலி-3 பேர் தற்கொலை
கொழும்பு:இலங்கையின் கிழக்கில் உள்ள தொப்பிகலா வனப்பகுதியில் நடந்த கடும் சண்டையில் 30 விடுதலைப் புலிகளை கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. 3 விடுதலைப் புலிகள் சயனைடு அருந்தி உயிர் துறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே சண்டை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொப்பிகலா வனப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.
இந்த சண்டையில், 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ராணுவத்தின் பிடியில் சிக்குவதைத் தவிர்க்க 3 விடுதலைப் புலிகள் சயனைடு சாப்பிட்டு உயிர் துறந்துள்ளனர்.
தொப்பிகலா பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நான்கு முகாம்கள் தகர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் இறந்ததாகவும், 17 பேர் காயமடைந்தனர் என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புலிகள் தெரிவிக்கையில், சண்டையில் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்து தங்களுக்கு தகவல் ஏதும் இல்லை என்று கூறினர்.