கைதான அதிமுக பிரமுகர் சிறையில்மரணம்-சேலத்தில் பரபரப்பு
சேலம்:அதிமுக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சுகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால், சிறைக்குள்ளும், வெளியிலும் பரபரப்பு நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி அதிமுகவினர், முதல்வர் கருணாநிதியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டு, மாநிலம் முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகிய முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, விஜயலட்சுமி பழனிச்சமி, வெங்கடாச்சலம், முன்னாள் மேயர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மாவட்ட மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சுகுமாரும் (52) ஒருவர். நேற்று இரவு வியர்த்துக் கொட்டியது. நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சக அதிமுகவினர் சிறைக்காவலர்களிடம் டாக்டர்களை அழைக்குமாறு கூறினார். ஆனால் அதை காவலர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இரவெல்லாம் சுகுமார் உடல் சுகவீனத்தால் அவதிப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சுகுமார் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் உதவி ஆட்சித் தலைவர் காஜா மொய்தீன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
அதிமுக பிரமுகர் சிகிச்சை தரப்படாமல் இறந்த தகவல் தலைமைக்கு கிடைத்ததும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரை கட்சித் தலைமை சேலத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மகன் கைது-தாய் அதிர்ச்சியில் சாவு
இதேபோல தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலாளர் சென்னமூர்த்தியின் தாயார் சென்னம்மாள், தன் மகன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications