சூடாகும் மதுரை தேர்தல் களம்தலைவர்கள் குவிகிறார்கள்
மதுரை: மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் களம் சூடாக ஆரம்பித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மதுரையில் பிரசாரத்திற்காக குவியவுள்ளனர்.
மதுரை மேற்குத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, காங்கிரஸ் சார்பில் ராஜேந்திரன், தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமாரன், பாஜக சார்பில் சீத்தாராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர 25 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். நான்கு முனைப் போட்டி என்றாலும் கூட அதிமுக, காங்கிரஸ் இடையேதான உண் மையான போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் வேட்பாளருக்காக முதல்வர் கருணாநிதி வருகிற 23ம் தேதி செல்லூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி 10 நாள் முகாமிட்டு பிரசாரம் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ராஜுவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா 21ம் தேதி பிரசாரம் செய்கிறார். மதிமுக சார்பில் வைகோவும் பிரசாரம் செய்யவுள்ளார்.
தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் 18ம் தேதி முதல் ஒரு வாரம் தீவிரப் பிரசாரம் செய்கிறார். விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.
பாஜக மாநில தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்பி திருநாவுக்கரசர் ஆகியோரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட அடுத்த வாரம் மதுரை செல்கின்றனர்.
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 24ம் வரை தம் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்கிறார்.
அரசியல் கட்சிகளி்ன் தலைவர்கள் அடுத்தடுத்து அணல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால் மதுரை தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.