சிக்குன்குனியா தடுப்புக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் சிக்குன்குனியா காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளுக்காக ரூ.7 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறி்ப்பில்,
கேரளாவில் பரவியுள்ள சிக்குன்குனியா காய்ச்சல் தமிழகத்திற்கும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் கருணாநிதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் விளக்கினர்.
சிக்குன்குனியா குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்திடும் வகையில் அதிக விளம்பரங்களை செய்திட வேண்டும் என அப்போது முதல்வர் அறிவுறுத்தினார்.
இதையும் தாண்டி சிக்குன்குனியா தமிழகத்திற்கு வந்துவிட்டால், அதற்கு தேவையான மருந்துகளை முன்கூட்டியே வாங்கி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்நோய் நிரந்தரமாக தமிழகத்திற்கு வராத அளவிற்கு தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்காக கிராமங்களில் கொசுக்களை அறவே ஒழிக்க, 3,850 தற்காலிக் களப்பணியாளர்களை நியமிக்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதற்காக அரசு சார்பில் ரூ.7 கோடியே 10 லட்சம் நிதியினை முதல்வர் ஒதுக்க ஆணையிட்டுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications