ஷெகாவத்துக்கு ஆதரவு திரட்டும் ஜெ.
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரான் சிங் ஷெகாவத் சுயேச்சையாக களம் இறக்கப்பட்டால், அவரை ஆதரிக்கலாம் என 3வது அணி தலைவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி வருவதாக தெரிகிறது.
சமீபத்தில் ஹைரதாபாத்தில் கூடிய காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இடம் பெறாத தலைவர்கள் கூட்டத்தில் 3வது அணியை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டணியின் அதிகாரப்பூர்வமற்ற தலைவர் போல ஜெயலலிதா கருதப்படுகிறார். விரைவில் சென்னையி்ல நடைபெறும் கூட்டத்தில் கூட்டணியின் பெயர், தலைவர் உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்படவுள்ளன.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக 3வது அணித் தலைவர்களிடையே தீவிரமான விவாதம் நடந்து வருகிறது.குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் ஜெயலலிதா, துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்திற்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.
ஒரு வேளை ஷெகாவத் சுயேச்சையாக களம் இறக்கப்பட்டால், அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என 3வது அணி தலைவர்களிடம் ஜெயலலிதா கூறி வருகிறாராம். 3வது அணித் தலைவர்கள் தவிர பிற தேசிய எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் ஜெயலலிதா தீவிர ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் அவர் தொலைபேசியில் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை விட முக்கியமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் ஜெயலலிதா தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
சிவராஜ் பாட்டீலை நிறுத்தும் காங்கிரஸ் கட்சியின் முடிவை சரத் பவார் முற்றிலும் நிராகரித்துள்ளார், அதிருப்தியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர உ.பி முதல்வர் மாயாவதியும், ஜெயலலிதாவுடன் பேசியதாக தெரிகிறது. இதற்கிடையே, சென்னையில் ஜெயலலிதா தலைமையி்ல நடைபெறும் 3வது அணித் தலைவர்கள் கூட்டத்தின் போது மேலும் சில கட்சிகள் இக்கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது. தற்போது இக்கூட்டணியில் 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.