வி.ஏ.ஓ.தேர்வில் விஷமக் கேள்விஅரசுக்கு பாஜக, சிபிஐ கண்டனம்
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வில், பாலகங்காதர திலகர், வ.உ. சிதம்பரனார் உள்ளிட்டோரை தீவிரவாதிகள் போல சித்தரித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் விஏஓ பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதற்கான வினாத்தாளில், 17வது கேள்வியாக பாலகங்காதர திலகர், அரவிந்தகோஷ், வஉசி, சுரேந்திரநாத் பானர்ஜி உள்ளிட்ட சுதந்தர போராட்ட தியாகிகள் பெயர் குறிப்பிட்டு, இதில் யார் தீவிரவாதிகள் இல்லை என கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விஏஓ வேலைக்கு செல்கிறவர்களுக்கு யார் தீவிரவாதி என்ற கேள்வி அவசியமற்றது. அவர்கள் செய்யும் வேலை இந்த கேள்வி சம்பந்தம் இல்லாததது. இப்படி ஒரு கேள்வி ஏன் கேட்கப்பட்டது என்பதை கேள்வி தயாரித்தவர்களிடம் கேட்க வேண்டும் என்றார்.
மாநில பாஜக தலைவர் இல.கணேசன் இந்தக் கேள்வி குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் தேர்வில், 4 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை குறி்ப்பிட்டு, இதில் யார் தீவிரவாதி என கேட்கப்பட்டுள்ளது.இது கண்டிக்கத்தக்கது. அவர்களை புரட்சியாளர் என கூறலாமே தவிர தீவிரவாதிகள் என கூறகூடாது. வன்முறையில் ஈடுபடுபவனையும், தேசதுரோகியையும், அப்பாவி மக்களை கொல்பவனையும் தான் தீவிரவாதி என சித்தரிக்கின்றனர் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications