தமிழகம், கர்நாடகம், டெல்லியிலும் வேகமாய் பரவும் சிக்குன்குனியா
சென்னை:கேரளத்தைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகம் மற்றும் டெல்லிலும் சிக்குன்குனியா காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த நோய்க்கு கேரளாவில் 70 பேர் வரை பலியாகிவிட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல இடங்களிலும் பரவி வருகிறது.
தமிழகத்திலும் இந்நோய் வேகமாக பரவி வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக கேரள எல்லைகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளத்தில் இருந்து வரும் பஸ்கள், ரயில் பெட்டிகள், வாகனங்கள் போன்றவற்றிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாமக்கல், தேனி மாவட்டங்களிலும் சிக்குன்குனியா வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு கர்நாடகவிலிருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பரவிய சிக்குன்குனியா காய்ச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நோயால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பரவியுள்ளது. இங்கு கூலி தொழிலாளர் 200 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காலில் வீக்கம், மூட்டு வலி ஏற்பட்டு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் சங்ககிரி பகுதியிலுள்ள மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இப்பகுதிக்கு வந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா வேகமாக பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதே போல் தேனி மாவட்டத்திலும் 2 பேர் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அதே போல கர்நாடகாவிலும் இந்நோய் பரவியுள்ளது. மாநிலம் முழுவதும் சிக்குன்குனியாவில் பாதிக்கப்பட்ட 1,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் டெல்லியிலும் இக்காய்ச்சல் பரவி வருகிறது. அங்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்மணியின் இரத்தத்தை பரிசோதித்தபோது இது தெரிய வந்தது. மேலும் சிக்குன்குனியா பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடுத்திருப்பதாக சுகாத்தாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு சிக்குன்குனியாவால் 40 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications