ரஜினி ரசிகர்களுக்கு 7 நிபந்தனைகள்ஆடக் கூடாது, காட்டக் கூடாது, கேட்கக் கூடாது
சீட் மீது ஏறி நின்று ஆடக் கூடாது, திரைக்கு முத்தா கொடுக்கக் கூடாது, கற்பூரம் ஏற்றிக் காட்டக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் புதுவையில், சிவாஜி படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுக்காக போடலாம் என மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரியில், முருகன், பாலாஜி, ராமன் ஆகிய மூன்று தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்படுகிறது. சமீபத்தில்தான் புதுவையில் புதிய படங்கள் திரையிடும்போது, முதல் காட்சியை ரசிகர்களுக்காக போடுவதற்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டது.ரசிகர்களால் பெரும் ரகளை ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிவாஜி படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் ரஜினி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உழவர்கரை நகராட்சித் தலைவர் ஜெயபால், ஆணையாளர் தியாகராஜன், 3 தியேட்டர்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர் மன்றம் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ரசிகர்களால் தங்களுக்கும், தியேட்டர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் விளக்கினர். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், 7 நிபந்தனைகளுடன் ரசிகர் காட்சிக்கு அனுமதிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, தியேட்டரில் சீட்கள் மீது ஏறி நின்று ஆட்டம் போடக் கூடாது, தியேட்டர் திரையில் முத்தம் கொடுக்கக் கூடாது, கற்பூரம் ஏற்றிக் காட்டக் கூடாது, பூக்கள், காகிதங்களைக் கிழித்து போடக் கூடாது, கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்யக் கூடாது. இதை விட முக்கிமயாக எந்தக் காட்சிக்கும் ஒன்ஸ்மோர் கேட்கவே கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இதை ரஜினி ரசிகர் மன்றம் ஏற்றுக் கொண்டதால், ரசிகர் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஏழுமலையானை வணங்கினார் சிவாஜி:
சிவாஜி ரிலீஸுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்நிலையில் ரஜினிகாந்த் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை வணங்கினார்.
2 நாட்களுக்கு முன்புதான் ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து சென்னைக்குத் திரும்பினார். இதையடுத்து திருப்பதிக்குச் சென்ற ரஜினிகாந்த் அங்கு ஏழுமலையானை தரிசித்தார்.
சிறப்பு தரிசனம் மூலம் பாலாஜியை மனமுருக பிரார்த்தித்தார் ரஜினி. கோவிலுக்கு ரஜினி வந்ததைப் பார்த்த ரசிகர்கள் திரளாக கூடி ரஜினியை வரவேற்றனர்.
தரிசனத்தை முடித்து விட்டு கோவிலை விட்டு வெளியே வந்த ரஜினியை வழக்கம் போல செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். சிவாஜி படம் குறித்துக் கேட்டனர்.
அவர்களிடம் ரஜினி பேசுகையில், எனது திரையுலக வாழ்க்கையில் சிவாஜி ஒரு முழுமையான படம். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும். திரையுலகில் புதிய சகாப்தம் படைக்கும் என்றார் ரஜினி.
படைக்கட்டும் படையப்பா!












Click it and Unblock the Notifications