அட்லாண்டிஸ் சேதம்-நாளை மீண்டும் ரிப்பேர்
ஹூஸ்டன்:அட்லாண்டிஸ் விண்கலத்தின் வெளிப்புற வெப்பத் தடுப்பு தகட்டில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்ட அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வருவதற்காக அட்லாண்டிஸ் விண்வெளிக்கலம் விண்ணுக்குச் சென்றுள்ளது.
![]() |
விண்ணில் பாயும்போது அதன் வெப்பத் தடுப்புத் தகடுகள் சேதமடைந்தன. இதையடுத்து அதை சரி செய்யும் பணியில் விண்வெளியில் உள்ள வீரர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளிவந்து விண்ணில் நடந்து, தகடுகளை சீரமைக்கும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் கோளாறு இன்னும் சரி செய்யப்படவில்லை.
இதுவரை 2 முறை இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் ஒருமுறை ரிப்பேர் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுகுறித்து நாசா செய்தித் தொடர்பாளர் கைல் ஹெர்ரிங் கூறுகையில், வெள்ளிக்கிழமை 3வது முறையாக விண்ணில் நடந்து ரிப்பேர் செய்யும் பணியில் வீரர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்த முயற்சியின்போது, சேதமடைந்த பகுதியை ஒட்டிப் பிணைக்கும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபடவுள்ளனர் என்றார்.
இதே பிரச்சினை காரணமாகத்தான் கடந்த 2003ம் ஆண்டு, கொலம்பியா விண்கலம் இந்தியாவின் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேருடன் பூமிக்குத் திரும்புகையில் நடுவானில் வெடித்துச் சிதறியது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது அட்லாண்டிஸ் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அந்த அளவுக்குப் பெரிதில்லை என்ற போதிலும் எந்தவிதமான சிக்கலுக்கும் இடம் தர நாசா விஞ்ஞானிகள் விரும்பவில்லை. இதன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலை முழுமையாக சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.
நேற்று நடந்த 2வது விண் நடையின்போது பாட்ரிக் பாரஸ்டர், ஸ்டீவன் ஸ்வான்ஸன் ஆகிய இரு வீரர்களும் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 7 மணி நேரம் வெளியில் இருந்த இருவரும், பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் திரும்பினர்.
இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள புதிய சூரிய சக்தி கருவியால் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். இந்தக் கருவியை பொருத்திய பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் முக்கிய கம்ப்யூட்டர்கள் செயலிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஹூஸ்டனில், சர்வதேச விண்வெளி நிலைய திட்ட மேலாளர் மைக் சஃப்ரடனி கூறுகையில், இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. இதனால் விண்வெளி நிலையத்தில் சில காலத்திற்கு விண்வெளி வீரர்கள் யாரும் இருக்க முடியாத நிலை ஏற்படக் கூடும் என்றார்.
16 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நிர்வகித்து வருகின்றன. அதில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள கம்ப்யூட்டர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனவாம்.
விண்வெளி நிலையத்தை வழி நடத்திச் செல்வது, உயிர் காக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் கம்ப்யூட்டர்கள்தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவை இல்லாமல், விண்வெளி நிலையத்தை நிர்வகிப்பது, அங்கு விண்வெளி வீரர்கள் தங்குவது மிகவும் ரிஸ்க்கான ஒன்று.
இதற்கு முன்பும் இதுபோன்ற பிரச்சினை எழுந்துள்ளது. ஆனால் அப்போது முழுமையான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த முறை ஏற்பட்டுள்ள பாதிப்பு நாசா விஞ்ஞானிகளை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாம்.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள கம்ப்யூட்டர்கள் நல்ல நிலையில் உள்ளனவாம். ஆனால் ரஷிய கம்ப்யூட்டர்களின் உதவியில்லாமல் அமெரிக்க கம்ப்யூட்டர்களால் தனித்து இயங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய பிரச்சினையை சரி செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களை வெளியேற்றாமலேயே கோளாறை சரி செய்ய முயன்று வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குப் புதிதாக பொருத்தப்பட்ட சூரிய சக்தி கருவிதான் காரணமா என்றும் ஆராயப்பட்டு வருகிறு. அதை துண்டித்து விட்டால் கம்ப்யூட்டர்கள் சரியாகுமா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.













Click it and Unblock the Notifications