ஜூலை 19ம் தேதி ஜனாதிபதி தேர்தல்-16ம் தேதி மனு தாக்கல் தொடக்கம்
டெல்லி:புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி அறிவித்துள்ளார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற சனிக்கிழமை தொடங்குகிறது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் தேதி குறித்த தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான நவீன் சாவ்லா, குரேஷி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் தேதியை கோபாலசுவாமி வெளியிட்டார். அதன்படி, ஜூன் 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 30ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். ஜூலை 2ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 4ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெறலாம். ஜூலை 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஜூலை 21ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 776 எம்.பிக்கள் (ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பிக்கள்), 4,120 எம்.எல்.ஏக்கள் ஓட்டளிக்கவுள்ளனர். ஓட்டுச் சீட்டு முறைப்படி தேர்தல் நடத்தப்படும்.
மொத்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். மக்களவை தலைமைச் செயலாளர், தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். இதுதவிர ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உதவி தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் வேட்பு மனுவை வாக்குரிமை பெற்ற 50 பேர் முன்மொழிய வேண்டும். 50 பேர் வழிமொழிந்திருக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகை ரூ. 15 ஆயிரம் ஆகும்.
டெல்லி நாடாளுமன்றம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் உள்ள சட்டசபை வளாகங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு நடை பெறும்.
இந்த மையங்களில் எங்கு வேண்டுமானாலும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கலாம். ஆனால் அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்து, விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications