ஜனாதிபதி வேட்பாளர் வலுவானவராகஇருக்க வேண்டும்-கருணாநிதி கருத்து
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் வலுவான வேட்பாளரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிவராஜ் பாட்டீலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் படு விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. மறுபக்கம் புதிதாக உருவாகியுள்ள 3வது அணியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் சிவராஜ் பாட்டீல் களத்தில் நிறுத்தப்படக் கூடும் எனத் தெரிகிறது. ஆனால் இதை இடது சாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்தச் சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். கால் வீக்கம் காரணமாக நேற்று முன்தினம் போவதாக இருந்த முதல்வர் நேற்று மாலை கிளம்பிச் சென்றார்.
அவருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு, முதல்வரின் செயலாளர்கள் உள்ளிட்டோரும் சென்றனர்.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்திற்கு முதல்வர் சென்றார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பின்னர் வந்தார். அங்கு வைத்து இருவருடனும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
அப்போது சிவராஜ் பாட்டீல், சுஷில்குமார் ஷிண்டே, கரண் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
அப்போது வேட்பாளரை இறுதி செய்வதில் இடதுசாரிகளுடன் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க உதவுமாறு கருணாநிதியிடம் சோனியா கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தமிழ்நாடு இல்லத்தில், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், கருணாநிதியை சந்தித்தார். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனும் முதல்வரைச் சந்தித்து ஆலோசித்தார்.
அப்போது காங்கிரசின் விருப்பத்தை ஏற்குமாறு கம்யூனிஸ்ட் கட்சிகளை கருணாநிதி கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இன்னும் 2 நாட்கள் இங்கு இருப்பேன். கூட்டணி தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதை நானும் வரவேற்கிறேன்.
சோனியா காந்தி, பிரதமருடன் பேசியபோது 2க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார் கருணாநிதி.
இதன் மூலம் சிவராஜ் பாட்டீலை எதிர்க்கும் இடதுசாரிகளின் கருத்துடன் முதல்வர் கருணாநிதியும் ஒத்துப் போவதாக கூறப்படுகிறது. எனவே சிவராஜ் பாட்டீலுக்குப் பதில் வேறு வேட்பாளரை நிறுத்தவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஷிண்டேவுக்கு இப்போது வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications