லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ். ராமதாஸ் திடீர் கைது
புதுக்கோட்டை:தடை உத்தரவை மீறி லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக பிரபல லாட்டரிச் சீட்டு அதிபர் கே.ஏ.எஸ். ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
தமிழத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி திருட்டுத்தனமாக வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி பலரைக் கைது செய்துள்ளனர். சமீபத்தில் கோவையைச் சேர்ந்த லாட்டரிச் சீட்டு அதிபர் மார்ட்டினின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதையடுத்து மார்ட்டின் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த மறைந்த லாட்டரிச் சீட்டு அதிபர் கே.ஏ.எஸ். சேகரின் தம்பியும், லாட்டரிச் சீட்டு அதிபருமான திருச்சி கே.ஏ.எஸ். ராமதாஸ், தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திலகர் திடல் என்ற இடத்திற்கு விரைந்த போலீஸார் அங்கு ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை கட்டுக் கட்டாக பறிமுதல் செய்தனர். அங்கிருந்த வெள்ளைச்சாமி என்பவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கே.ஏ.எஸ். ராமதாஸிடமிருந்து லாட்டரிச் சீட்டுக்களை மொத்தமாக வாங்கி ராஜா என்பவர்தான் தன்னிடம் விற்க கொடுத்ததாக கூறினார்.
இதையடுத்து ராஜா, ராமதாஸ் ஆகிேயார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் திருச்சி அண்ணா நகரில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு விரைந்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications