நாளை கூடுகிறது அதிமுக செயற்குழு
சென்னை:மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு நாளை கூடுகிறது.
கொட நாடு எஸ்டேட் விவரகாரத்தில் ஜெயலலிதா சிக்கலில் மாட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் தந்த அபிடவிட்டில் கொட நாடு எஸ்டேட் முதலீடுகளை அவர் குறிப்பிடவில்லை. இதனால் அவரது பதவியைப் பறிக்க வேண்டும் என திமுக கோரி வருகிறது.
இது ஒரு புறமிருக்க இன்னொரு புறம், 2001 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்டார் ஜெயலலிதா. அப்போது தாக்கல் செய்த வாக்குமூல மனுவில் 4 இடங்களில் போட்டியிடும் விவரத்தை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்காமல் மறைத்தார்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தவிர சட்டத்துக்குப் புறம்பான வகையில் சென்னையில் கட்டப்பட்டுள்ள கட்டங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அதிமுக தலைமையகத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படி பல சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் தனக்கு அரசியல் பாதுகாப்பு தேடும் வேலையில் இறங்கியுள்ளார் ஜெயலலிதா.
நாயுடு, முலாயம் போன்றவர்களை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளார் ஜெயலலிதா. தன் மீது நடவடிக்கைகள் பாய்ந்தால் தேசிய அளவில் அதை பிரச்சனையாக்க இந்த அணி உதவும் என கணக்கிட்டுள்ளார் ஜெயலலிதா.
மேலும் ஜனாதிபதி தேர்தலிலும் மூன்றாவது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இது தவிர மதுரை மேற்குத் ெதாகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தீவிரம் காட்டி வருகிறார் ஜெயலலிதா.
இந் நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நாளை கட்சியின் தலைமையகத்தில் நடக்கிறது.
இக் கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மதுரை இடைத் தேர்தல், கட்சியின் தலைமையகத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது, ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications