59 வயது, 30 ஆண்டுகளாக ரத்ததானம்திருச்சி முதியவரின் லட்சிய சாதனை
திருச்சி:திருச்சியைச் சேர்ந்த 59 வயது சீனிவாச தத்தம், கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து பெரும் சேவை புரிந்து வருகிறார். அத்தோடு பள்ளி, கல்லூரிகளும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
உலக ரத்த கொடையாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில், திருச்சியைச் சேர்ந்த சீனிவாச தத்தம் குறித்த தகவலைத் தெரிந்து கொள்வது, ரத்ததானம் குறித்த ஆர்வம் கொண்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையும்.
தமிழ்நாடு ரத்த கொடையாளிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் சீனிவாச தத்தம். கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறார். இதுவரை 151 முறை ரத்ததானம் செய்துள்ளார் தத்தம்.
ரத்ததானம் குறித்து தத்தம் கூறுகையில், ரத்த தானம் குறித்த விழிப்புணர்ச்சி நம்மிடையே மிகவும் சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் இன்னும் கூட சிலர் ரத்ததானம் குறித்த அக்கறை இல்லாமல் உள்ளனர்.
இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 7.5 லட்சம் யூனிட் ரத்தம் தானமாக தேவைப்படுகிறது. ஆனால் இதில் 60 சதவீதம் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. 40 சதவீத பற்றாக்குறை நிலவுகிறது.
தமிழகத்தில் 1000 பதிவு செய்த ரத்த கொடையாளிகள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், நகரங்களிலும் ரத்ததானம் செய்ய கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். பலர் தேவைப்படும் போது ரத்தத்தை தானமாக தருகிறார்கள்.
ஆனால் கோடை காலத்தில் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு விடுவதால் ரத்தத்தை தானமாக தரும் மாணவர்களை அடைவதில் சிரமம் ஏற்படுகிறது. நகர்ப்புறங்களில் உள்ள படித்தவர்கள் கூட ரத்ததானம் செய்வதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் ரத்ததானம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க, பல உயிர்களைக் காக்க, ரத்ததானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். இதுதொடர்பாக அரசு, மாணவர் சமுதாயம், பொதுமக்கள், மருத்துவத் துறையினர், மீடியா ஆகியோர் இணைந்து செயலாற்ற வேண்டும்.
ரத்ததானம் செய்வோரின் ரத்த பிரிவை அறிவதற்கும், ரத்த மாதிரிகளை பரிசோதிப்பதிலும், நோயுள்ளவரா இல்லையா என்பதை அறிவதற்கு பெரும் செலவாகிறது. பெருநகரங்கள் மற்றும் பிற மாநகரங்களில் இதற்கு ரூ. 650 வரை செலவாகிறது.
எனவேதான் தனியார் ரத்த வங்கிகளிருந்து ரத்தம் வாங்குவதற்கு பெரும் தொகையை செலவிட நேரிடுகிறது. இதை ஏழை மக்களால் சமாளிக்க முடிவதில்லை.
எனவே ரத்த தானம் செய்வோரின் ரத்த மாதிரிகளை பரிசோதிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும்.
17 முதல் 65 வயது வரையுள்ள, நல்ல உடல் நலத்துடன் உள்ள யாருமே தங்களது உடலில் உள்ள ஐந்து லிட்டர் ரத்தத்தில், ஒரு யூனிட் (350 மில்லி) ரத்தத்தை தானமாக வழங்கலாம்.
ரத்ததானம் செய்தோருக்கு 21 நாட்களில், அவர்கள் தானம் செய்த ரத்தம் மீண்டும் உற்பத்தியாகி விடும். ஆண்களாக இருந்தால் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்களாக இருந்தால் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம்.
ரத்ததானம் செய்ேவாருக்கு மாரடைப்பு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை வரும் என்பது தவறு. இதை அமெரிக்க டாக்டர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர் என்றார் தத்தம்.
ரத்த தானம் செய்வதில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தத்தம் கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு 64 பேர் உயிரிழந்த சம்பவத்தின்போது படுகாயமடைந்த பலரின் உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளார்.
அந்த சமயத்தில் ரத்தம் தேவைப்பட்டவர்களுக்காக ரத்தத்தை வரவழைத்துக் கொடுத்து உதவியுள்ளார். அந்த சம்பவத்தில் காயமடைந்த யாரும் ரத்தம் இல்லாத காரணத்தால் ஒருவர் கூட இறக்கவில்லை என்று தத்தம் கூறுகிறார்.
ரத்ததானம் குறித்த மாணவர்களிடையே பிரசாரம் செய்தும் வருகிறார் தத்தம். இதற்காக சிறப்பு வகுப்புகளையும அவர் நடத்துகிறாராம்.
பள்ளி, கல்லூரிப் பாடத் திட்டத்தில் ரத்த தானம் குறித்த பாடத்தையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் தத்தம், மாணவர்களிடையே ரத்ததானம் மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்கிறார்.
தத்தத்தின் இந்தப் பிரசாரத்திற்கும், அயராத உழைப்பிற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் இவரது வீட்டுக்கு அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள், ரத்த கொடையாளிகளாக மாறியுள்ளனர். மேலும் ரத்தத்தை தானமாக கொடுக்கச் செல்வோரை மருத்துவமனைகளுக்கு இலவசமாகவே அழைத்துச் செல்கிறார்களாம் இந்த ஆட்டோ டிரைவர்கள்.
தத்தம் வாழ்த்தப்பட வேண்டியவர் மட்டுமல்ல, வணங்கப்பட வேண்டியவரும் கூட.












Click it and Unblock the Notifications