மதுரை-ரெளடிகளை கொண்டு வன்முறை நடத்ததிட்டம்: திமுக, அதிமுக பரஸ்பரம் புகார்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் வன்முறையை தூண்டிவிட திட்டமிட்டிருப்பதாக திமுகவும் அதிமுகவும் தேர்தல் ஆணையத்திடம் ஒருவர் மீது ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளன.
மதுரை மேற்கு தொகுதியில் பொன்னாகரம் பிராட்வே பகுதியில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எம்ஜிஆர் மன்றத்தை சில மர்ம நபர்கள் இடித்து தரைமட்டமாக்கினர்.
இந் நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் முருகன், ஜான்சேவியர், கருணாநிதி, ரமேஷ், ராஜேன் கண்ணன் உள்ளிட்டோர் தேர்தல் பார்வையாளர் அஜீத் தியாகியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலின்போது அதிமுக மற்றும் மதிமுகவினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ செல்லச்சாமி, பழனிச்சாமி ஆகியோர் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.
இவர்களுடன் 100க்கும் மேற்பட்ட ரவுடிகளும் உள்ளனர். எனவே தேர்தலை அமைதியாக நடத்த அவர்களை வெளியேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இதேபோல் அதிமுக சார்பில் தமிழ்செல்வன், கோவிந்தன், கருணாகரன், இமையன் உள்ளிட்ட 10 வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தனர்.
அதில், இடைத் தேர்தலில் கள்ள ஓட்டு போடவும், வன்முறையை ஏற்படுத்தவும் திமுக கூட்டணி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கொலை குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்த தொகுதியில் நடமாடி வருகின்றனர். வாக்களார்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications