ஜனாதிபதி: காங். வேட்பாளருக்குகண்டிப்பாக ஆதரவு கிடையாது-ஜெ.
சென்னை:காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை 3வது அணி நிச்சயம் ஆதரிக்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் கூடியது. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்த பதில்கள்:
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பெண் என்பதால் அவருக்கு ஆதரவளிப்பீர்களா?
ஜெ.: காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஆதரிக்க முடியாது.
கேள்வி: பிரதீபா பாட்டீல் குறித்து உங்களது கருத்து என்ன?
ஜெ.: அதிமுகவைப் பொருத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆதரிக்க முடியாது. இதுதான் அதிமுகவின் தெளிவான, வெளிப்படையான, உறுதியான நிலைப்பாடாகும்.
கேள்வி: 3வது அணி சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்தும் எண்ணம் உள்ளதா?
ஜெ.: 3வது அணி என்ற பெயரையே நாங்கள் விரும்பவில்லை. இந்த அணியின் புதிய பெயர் 18ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
கேள்வி: 3வது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதில் என்ன குழப்பம் உள்ளது?
ஜெ.: 3வது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எப்படி வேண்டுமானாலும் நாங்கள் முடிவெடுக்கலாம்.
கேள்வி: நீங்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்பீர்களா?
ஜெ.: அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை.
தொடர்ந்து ஜெயலலிதா கூறுகையில், 18ம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் 3 முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலில் 3வது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது அல்லது பாஜக வேட்பாளரை ஆதரிப்பது அல்லது யாரையும் ஆதரிக்காமல் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது. இந்த மூன்று அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications