நெல்லை ஐ.டி. பூங்கா: கருணாநிதி அடிக்கல் நாட்டினார்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ. 300 கோடியில் அமையவுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லை இன்று முதல்வர் கருணாநிதி நெல்லையில் நாட்டினார்.
நெல்லை அருகே உள்ள கங்கை கொண்டானில் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சார்பில் ரூ. 300 கோடி செலவில், தகவல் தொழில்நுட்ப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நெல்லையில் நடந்தது.
இதற்காக இன்று காலை நெல்லை சென்றடைந்தார் முதல்வர் கருணாநிதி. பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இதே விழாவில் 4வது கட்ட இலவச நிலம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார் முதல்வர். இந்த திட்டத்தின் மூலம் 26 ஆயிரத்து 308 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது.
இதே விழாவில் மேலும் பல நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, மாநில அமைச்சர்கள் பூங்கோதை, மைதீன்கான், நெல்லை மாநகராட்சி மேயர் ஏ.எல்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சி திடலில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். மாநாட்டுக்கு தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு மதுரை செல்கிறார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications