டிக்கெட் கட்டணம்: தியேட்டர்களுக்கு அரசு எச்சரிக்கை
சென்னை:அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
ரஜினிகாந்த்தின் சிவாஜி படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆட்சியில், தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும்போது சில வாரங்களுக்கு இஷ்டம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தியேட்டர்களுக்கு அரசு சலுகை அளித்திருந்தது.
ஆனால் அந்த சலுகையை திமுக அரசு ரத்து செய்து விட்டது. குறைந்தபட்ச கட்டணம், அதிகபட்சக் கட்டணத்தை அரசே நிர்ணயித்துள்ளது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள சிவாஜி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தவறு எங்கு நடக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், குறிப்பிட்ட சில திரைப்படங்களுக்கு கூடுதல் நுழைவுக் கட்டணம் மிக அதிகமாக வசூலிப்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கடந்த 15ம் தேதி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது சம்பந்தமாக அரசு பின்வரும் விளக்கத்தை அளிக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக புகார்கள் வரப் பெற்றால், சம்பந்தப்பட்ட தியேட்ட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications