மருத்துவமனையின் தவறான சான்றிதழ்;கேள்விக்குறியில் வாலிபர் வாழ்க்கை!
நாகர்கோவில்:எய்ட்ஸ் உள்ளதாக தனியார் மருத்துவமனை கொடுத்த தவறான சான்றிதழால் மனைவியால் புறக்கணிக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்ட வாலிபர் அந்த மருத்துவமனை மீது வழக்கு போட்டுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விஜயன். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில்தான் விஜயனுக்குக் கல்யாணம் நடந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் விஜயன்.
இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அப்போது அவருக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் விஜயனுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் விஜயனின் மனைவி. கணவர் மீது கோபம் கொண்டு தாய் வீடு போய் விட்டார். குழம்பிப் போன விஜயன், வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.
இருப்பினும் இன்னொரு முறை உறுதி செய்து கொள்ளலாம் என்று கருதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று உறுதிப்படுத்தும் சோதனையை மேற்கொண்டார். அதிலும், எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.
மகிழ்ச்சி அடைந்த விஜயன், அந்த சான்றிதழுடன் மனைவியைத் தேடி ஓடினார். சந்தோஷப்படுவார் என்று எதிர்பார்த்த விஜயனுக்கு, போலிச் சான்றிதழைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறீர்களா என்று மனைவி கேட்டதும் பெரும் அதிர்ச்சியாகிப் போய் விட்டது. மேலும் காவல் நிலையத்தில் புகார் செய்வேன் என்றும் அவரது மனைவி கூறியுள்ளார்.
மனைவியின் பேச்சால் மனம் உடைந்த விஜயன், இத்தனைப் பிரச்சினைக்கும் காரணமான, தவறான மருத்து சான்றிதழைத் தந்த தனியார் மருத்துவமனை மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications