அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்க ஜெயலலிதா திடீர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாம் நிறுத்தப்பட வேண்டும். அவருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான 3வது அணி கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி சென்று அவரை சந்தித்து மீண்டும் போட்டியிடுமாறு கோரப் போவதாகவும், அவரையே ஆதரிக்கப் போவதாகவும் இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.

தேசிய அளவில் உருவாகியுள்ள 3வது கூட்டணியின் 2வது கூட்டம் இன்று சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்தது.

Presidential nominee Prathiba Patil with President Abdul Kalam

கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதில், உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஹரியாணா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் அதிருப்தி பாஜக தலைவருமான பாபுலால் மராண்டி, சமாஜ்வாடித் தலைவர் அமர்சிங், அஸ்ஸாம் கன பரிஷத் தலைவர் பிரிந்தாபன் கோஸ்வாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 8 கட்சிகளின் தலைவர்களும் கலந்து ெகாண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துத் தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் ஜெயலலிதா பேசுகையில்,

குடியரசுத் தலைவர் தேர்தல் அரசியலாக்கப்படக் கூடாது என்று இன்றைய கூட்டத்தில் தலைவர்கள் கருத்து ெதரிவித்தனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் வேட்பாளராக பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி, பைரான் சிங் ஷெகாவத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் போன்ற நாட்டின் முக்கியப் பதவிக்கான தேர்தலில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எங்கள் கூட்டணித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Shekhawat

எங்களைப் பொறுத்தவரை, நாட்டில் இன்றைக்கு குடியரசுத் தலைவர் பதவிக்கு வர தகுதி படைத்த, திறமை படைத்த, அனைவராலும் விரும்பப்படுகிற, தொழில்துறையினர், விஞ்ஞானிகள், பொதுமக்கள், மாணவ சமுதாயத்தினர் என அனைத்துத் தரப்பினராலும் விரும்ப்பபடுகிற ஒரே நபர் இப்போதைக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மட்டுமே.

எனவே அப்துல் கலாமுக்கு மீண்டும் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பைத் தர வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அப்துல் கலாமே மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவர் குடியரசுத் தலைவர் பதவியில் தொடர அனைத்துக் கட்சிகள், கூட்டணிகள் ஆதரவு தர வேண்டும்.

அரசியல் மாச்சரியங்களை மறந்து, நாட்டின் ஒற்றுமை, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு கலாமுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர முன்வர வேண்டும்.

நாங்கள் அனைவரும் டெல்லி சென்று அப்துல் கலாமை சந்தித்து அவரிடம் மீண்டும் தேர்தலில் நிற்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளோம். இப்போது செய்தியாளர்கள் கூட்டம் மூலமாக அவருக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என்ற முடிவை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

திமுகவுக்கு செக்:

கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாஜக, இடதுசாரிகள், முக்கியமாக திமுக ஆகியவை ஆதரவு தர வேண்டும்.

பிரதீபா செலக்ஷன் ஒரு ஜோக்:

கலாமுக்கு நிகராக, இணையாக, இப்போது யாரும் கிடையாது. பிரதீபா பாட்டீலையும், கலாமையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பிரதீபா பாட்டீலுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அவரை வேட்பாளராக்கியது மிகப் பெரிய ஜோக்.

நாட்டில் தற்போது அரசியல்ரீதியாக பெரும் பிளவு காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டை தலைமை தாங்கி சீரான வழியில் நடத்திச் செல்ல கலாம் போன்ற தகுதி படைத்த ஒருவரால்தான் முடியும்.

அப்துல் கலாமுக்கு நாடு முழுவதும் மிகப் பெரும் ஆதரவு உள்ளது. அனைத்து சமுதாயத்தினரும் அவரை ஆதரிக்கின்றனர். அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக்கப்பட வேண்டும் என பெரும் ஆதரவு நிலை காணப்படுகிறது. ஆனால் பிரதீபா பாட்டீலுக்கு மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை.

மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில்தான் நாங்கள் கலாம் பெயரை அறிவித்துள்ளோம்.

எங்களின் கருத்தையும், கோரிக்கையையும் தெரிவித்துள்ளோம். இதற்கு மற்ற கட்சிகளிடமிருந்து என்ன கருத்து வருகிறது என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

கூட்டணிக்கு புது பெயர்:

எங்களது கூட்டணிக்கு புதிய பெயர் வைத்துள்ளோம். கூட்டணியின் பெயர், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்றார் ஜெயலலிதா.

(காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகும். இந்தப் பெயரை சூட்டியவர் முதல்வர் கருணாநிதி. இப்போது கிட்டத்தட்ட அதே பெயரில் ஜனநாயகத்தையும் சேர்த்து தனது அணிக்கு பெயர் சூட்டியுள்ளார் ஜெயலலிதா.)

கூட்டணிக்கு யார் தலைவர் என்று கேட்டபோது, இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளன. எனவே கூட்டணித் தலைவர் யார் என்பது குறித்து நாங்கள் இன்னும் யோசிக்கவில்லை என்றார்.

பின்னர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், மிகச் சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார் அப்துல் கலாம். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அவரைப் போன்ற ஒருவர்தான் தேவை.

இளைஞர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஊக்கமாக கலாம் விளங்குகிறார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும். நடுநிலையுடன் செயல்படக் கூடியவர் கலாம். எனவே அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்.

அரசியலுக்காக மட்டும் நாங்கள் அணி சேரவில்லை. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இணைந்துள்ளோம் என்றார்.

பாத்திமா பீவி....:

முன்னதாக மூன்றாவது அணியின் சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அல்லது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுநருமான பாத்திமா பீபி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது நீதிமன்றமே குற்றம் சாட்டிய நிலையிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஏதோ காரணத்துக்காக, ஜெயலலிதாவையே முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பாத்திமா பீவி என்பது நினைவிருக்கலாம்.

கேரளத்தைச் சேர்ந்த பாத்திமா பீவிக்கு வேண்டப்பட்ட மலையாள நிதி நிறுவன அதிபரை மிரட்டியதால் தான் வெங்கடேச பண்ணையாரை எண்கவுண்டரில் போட்டுத் தள்ளியது அதிமுக அரசு என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டதும் நினைவுகூறத்தக்கது.

ஆனால், பாத்திமா பீவிக்கு பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. அதே போல பரூக் அப்துப்லாவுக்கும் கூட்டணியில் பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

இதையடுத்து பெண் வேட்பாளரை நிறுத்தி தங்களுக்கு செக் வைத்த காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தக் கோருவது என முடிவெடுக்கப்பட்டது.

இதன்மூலம் தேசிய அளவில் தங்களது கூட்டணிக்கு புதிய மரியாதை கிடைக்கும் என ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், கலாம் அதை ஏற்காவிட்டால் இந்தக் கூட்டணி யாரை ஆதரிக்கும் என்று தெரியலில்லை.

ஆனால், எக்காரணம் கொண்டும் பைரான் சிங் ஷெகாவத்தை ஆதரிப்பதில்லை என மூன்றாவது அணியின் முக்கிய கட்சியான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி முடிவு செய்துள்ளது.

அக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் ஆதரவை இழந்ததால் தான் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சி தோல்வியடைந்தது. இந் நிலையில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவுக்கு அந்தக் கட்சி வந்துள்ளது.

அதே போல சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+