கலைஞர் மாதிரி ஆக நினைத்தவன் நான்-திருமா
திருநெல்வேலி:நாங்கள் யாருக்காக போராடுகிறோம் என மக்கள் தெரிந்து கொண்டு எங்கள் பக்கம் வந்துவிட்டால் அவர்களுது வெற்றி எளிதாகும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய மண்ணுரிமை மாநாட்டில் கருணாநிதி பேசுகையில்,
டெல்லியில் ஜனாதிபதி தேர்தலில் பெண்ணுரிமைக்காக வாதாடி விட்டு, இன்று மண்ணுரிமை மாநாட்டிற்கு வந்துள்ளேன்.
இந்த மேடை நானும் திருமாவளவன் போன்றோரும் பிறந்த குடிசை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாநாட்டின்போது இந்த மேடை மாளிகையாக மாற வேண்டும்.
அது கொடநாடு மாளிகை போல் அல்லாமல் கடின உழைப்பால் மாறிய மாளிகையாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை நான் அளிப்பேன்.
60 வருடங்களுக்கு முன் நான் எழுதி நடித்த நாடகத்தில் சாதி ஒழிப்பு வசனம் பேசினேன். பின்னர் தஞ்சாவூரில் 1944ம் வருடம் தூக்குமேடை நாடகத்திலும், பின்னர் சிதம்பரம் மாநாட்டிலும் சாதி ஒழிப்பு கருத்துகளை கூறினேன். இதனால் என்னை ஊருக்குள் நுழைய அனுமதிக்காததால் அன்றிரவு எனக்கு நடக்கவிருந்த முதலிரவு நடக்காமல் போனது. வேறு எங்காவது வைத்து கொள் சிதம்பரத்திற்குள் நுழையாதே என போலீஸார் விரட்டியடித்தனர்.
சிறுத்தைகள் என்றதும் பாரதிதாசன் பாடிய பூட்டிய கதவை திறந்து வெளியே வா சிறுத்தையே என கவிதை எனக்கு நினைவிற்கு வருகிறது. எழுச்சியும் விழிப்பும் இருந்தால் அனைத்திலும் வெற்றி காண முடியும்.
பெரியார், அண்ணா , அம்பேத்கார் போன்றவர்கள் சாதி ஒழிப்பு கருத்துகள் வெற்றி பெறவில்லை. ஏனெனில் யாருக்கு சொல்லப்பட்டதோ அவர்கள் இக்கருத்து ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். தலைவர்கள் யாருக்காக பாடுபடுகிறார்களோ அந்த தலைவர்களை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
நாங்கள் யாருக்காக பாடுபடுகிறோமோ அதனை அவர்கள் புரிந்து கொண்டால் அவர்கள் எங்கள் பக்கம் வருவார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் எங்கள் பக்கம் வந்துவிட்டால் அவர்களது கோரிக்கைகள் வெற்றி பெறும், அவர்கள் வெற்றி எளிதாகும் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் பேசுகையில்,
எங்கள் அழைப்பு ஏற்று முதல்வர் மாநாட்டிற்கு வந்து எங்களுக்கு முகவரி தந்தது பெருமையாக நினைக்கிறோம்.
இதுவரை நெல்லையில் கொளுத்தி வந்த வெயில் கலைஞர் வந்தவுடன் தென்றலாக மாறிவிட்டது. இயற்கை கூட அவர் விரலசைவில் உள்ளது.
இது சாதி அடிப்படையிலான மாநாடு அல்ல. தமிழர்கள் மானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு கடந்த 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் கூட்டத்தி்ல எந்தவிதமான வன்முறையும் நடந்ததில்லை. அதனால் தான் முதல்வர் வந்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் தலை நிமிர திட்டம் போட்டவர்கள் கலைஞர். ரஜினி, கமல், விஜய் போல மாற நினைக்கும் இளைஞர்கள் மத்தியில் கலைஞர் போல் வர நினைத்தவன் நான்.
இளைய தலைமுறையினருக்கு அவர் ஒரு பல்கலைக் கழகமாக உள்ளார். உலக அரசியல் தலைவர்கள் வரலாற்றில் எந்த தலைவரையும் தொண்டர்கள் இந்த அளவு பின்பற்றியதில்லை.
நான் அவரை அளவுகதிமாக புகழ்வதாக நினைக்க வேண்டாம். அது என் எண்ணமும் அல்ல. அவர் இதுபோல் எத்தனையோ புகழ்ச்சிகளையும், இகழ்ச்சிகளையும் கேட்டவர்.
ஏழை மக்கள் சார்பில் எங்கள் கோரிக்கைகளை உங்கள் காலடியில் வைக்கிறோம். இதை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மக்களுக்கு நிலம் வழங்குவது உங்கள் திட்டம் தான். அதை ஏழை மக்கள் அனைவருக்கும் கேட்கிறேன். வீடு கட்ட 5 சென்ட் நிலம் வழங்க வேண்டும். ரூ. 37,000 செலவில் தொகுப்பு வீடுகள் கட்டுவதை உயர்த்தி ரூ.1 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுக்க வேண்டும்.
இதுபோல் விவசாயம் செய்ய நிலம், குத்தகை உரிமம் வாங்க இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications