சென்னை: காங். பிரமுகர் கொடூரக் கொலை
சென்னை:சென்னை வியாசர்பாடியில், வட சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சென்னை நகரில் சமீப காலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிட்டத்தட்ட தினசரி ஒரு கொலை என்ற அளவுக்கு கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், வட சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாக்சர் பாட்ஷா (44). சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். வட சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளராகவும் இருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு தனது மனைவியிடம் வெளியில் போய் விட்டு வருவதாக கூறிச் சென்றார் பாட்ஷா. ஆனால் அவர் போன சில நிமிடங்களில் பாட்ஷா பிணமாக கிடப்பதாக அவரது வீட்டுக்குத் தகவல் வந்தது.
முல்லை நகர் பேருந்து நிலையத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பாட்ஷா பிணமாக கிடைந்தார். அவரது தலை அருகில் உள்ள டீக்கடை அருகே கிடைந்தது.
போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.
விசாரணையில், பாட்ஷாவை வண்ணாரபேட்டையில் உள்ள ஒரு பெண் வீட்டுக்கு கொலைக் கும்பல் வரவழைத்துள்ளது. அங்கு வைத்து அவரைக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் தலையை அறுத்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி முல்லை நகர் பேருந்து நிலையத்தில் போட்டு விட்டுச் சென்று விட்டனர். தலையை பாலிதீன் கவரில் போட்டு டீக்கடை முன்பு வீசியுள்ளனர்.
இதைப் பார்த்த டீக்கடைக்காரரிடம், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து கொலை நடந்ததாக கூறப்படும் பெண் வீட்டிற்கு போலீஸார் விரைந்தனர். அந்த வீட்டில் ரத்தக்கறை தென்பட்டது. அங்கிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஒரு விபச்சாரப் பெண் என்பதும், பாட்ஷா உள்ளிட்ட பலருடன் அவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
பெண் தகராறு தொடர்பாக பாட்ஷா கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications