மன நலம் பாதித்தவருக்கு அவமரியாதை:விமான நிலையம் முன்பு மனித சங்கிலி
சென்னை:செரபரல் பால்சி என்கிற மூளை வளர்ச்சி குன்றிய இளைஞரை தனியாக விமானத்தில் பயணம் செய்ய விடாமல் அவமரியாதை செய்து அவரை விமான நிலையத்தை விட்டு விரட்டிய தனியார் விமான நிறுவனத்தின் அநாகரீக செயலைக் கண்டித்து சென்னை விமான நிலையம் முன்பு உடல் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர்.
சென்னையைச் சேர்ந்த ராஜீவ் ராஜன் மூளை வளர்ச்சி குன்றியவர் ஆவார். டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இவர் ஏர் சஹாரா விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார்.
சம்பவத்தன்று விமான நிலையத்திற்கு தனியாக சக்கர நாற்காலியில் வந்திருந்தார் ராஜீவ் ராஜன். ஆனால் விதிகளைக் காரணம் காட்டி அவரை விமானத்தில் ஏற விடாமல் ஏர் சஹாரா நிறுவனத்தினர் தடுத்து நிறுத்தினர்.
ராஜீவ் ராஜன் தான் தனியாக செல்லக் கூடிய அளவுக்கு தகுதி உடையராக கூறியும் கூட அதைக் கண்டுகொள்ளவில்லை சஹாரா ஊழியர்கள். இதுகுறித்து ராஜன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் தலையிட்டு ராஜனை விமானத்தில் ஏற அனுமதிக்குமாறு கோரியும் சஹாரா ஊழியர்கள் பிடிவாதமாக அதை மறுத்து விட்டனர்.
விமான நிலையத்தில் நிராதரவாக விடப்பட்ட ராஜன் பின்னர் வீடு திரும்பினார். ஏர் சஹாரா நிறுவனத்தின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் பிருத்விராஜ் தனது மனைவி மற்றும் மன நலம் குன்றிய குழந்தையோடு விமானம் ஏறச் சென்றபோது அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவரது குழந்தையை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி அவமானப்படுத்தப்பட்டார்.
அந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் அனந்த்சர்மா கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது சென்னையில் மூளை வளர்ச்சி குன்றிய வாலிபரை ஏர் சஹாரா நிறுவனத்தினர் அவமானப்படுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஹாரா நிறுவனத்தின் இந்த செயலைக் கண்டித்து சென்னை விமான நிலையம் முன்பு உடல் ஊனமுற்றோர், மன நலம் குன்றியோர் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். பெரும் திரளானவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் ராஜனும் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications