உருப்படாத அணி தான் 3வது அணி: இளங்கோவன்
சென்னை:ஜெயலலிதா அமைத்துள்ள அணி உருப்படாத அணி என மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
அமைச்சரானதில் இருந்து ரொம்ப காலமாக வாயே திறக்காமல் இருந்த இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ராகுல் காந்தியின் 37வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஜெயலலிதா அமைத்துள்ள 3வது அணி, உருப்படாத அணி. முன்னாள் முதல்வர்கள், காலாவதியான அரசியல் தலைவர்கள் அமைத்துள்ள அணி தான் அது.
இந்த அணி அப்துல் கலாமை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. அவரே தேர்தலில் நிற்கப் போவதில்லை என கூறிவிட்டார். பின்னர் இவர்களாக அவரை வேட்பாளராக அறிவிக்கிறார்கள்.
பிரதீபா பாட்டீல் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு நல்ல ஜோக் என ஜெயலலிதா கூறியுள்ளார். கோமாளிக்களுக்கும், ஜோக்கர்களுக்கும் எல்லாமே ஜோக்காக தான் தெரியும்.
3வது அணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்பது அறிந்ததனால் தான் அப்துல் கலாமை வேட்பாளராக அறிவித்துள்ளனர். பாஜகவும், ஜெயலலிதா அணியும் சேர்ந்தாலும் கூட வெற்றி பெற முடியாது.
மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தேர்தல் தொகுதியில் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமான ஒன்று தான்.
அதிமுகவினர் தான் பணம் கொடுத்து வாக்கு கேட்டு வருகின்றனர். மாநில கட்சிகள் வலுவாக இருப்பதை ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் தயவால் தான் தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. திமுக ஆட்சி நன்றாக செயல்பட்டு வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்றார்.
பின்னர் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சாந்தராம்,
ஜனாதிபதி வேட்பாளராக பிரதீபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டதை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
பெண்களில் தலைவி என கூறிக் கொள்ளும் ஜெயலலிதா, ஒரு பெண்ணை இழிவுப் படுத்தி பேசியுள்ளார். இவ்வாறு பேசியதற்காக நாட்டு மக்களிடமும், பெண்களிடமும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாமை அறிவித்திருப்பது அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி தானே தவிர வேறில்லை. பாஜகவுடன் முறைமுகமாக கூட்டணி வைத்துள்ளார் ஜெயலலிதா. இதற்கான பலனை அவர் விரைவில் அடைவார் என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், தன்னை தவிர வேறு எந்த பெண்ணும் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என நினைப்பவர் ஜெயலலிதா. அவருக்கு தமிழக மக்கள் சரியாக பாடம் கற்றுக் கொடுப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications