கலாமை சந்திக்க ஜெ. செல்லாதது ஏன்?:மூன்றாவது அணியில் விரிசல்?
சென்னை:அப்துல் கலாமை சந்தித்து மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கோருவற்காக டெல்லி செல்லவிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் மூன்றாவது அணியின் பிற தலைவர்கள் கலாமை திட்டமிட்டபடி சந்தித்தனர். அவர்களோடு அதிமுக சார்பில் மாஜி மந்திரி தம்பிதுரை மற்றும் மலைச்சாமி ஆகியோர் சென்றனர்.
ஜெயலலிதாவை உள்ளடக்கிய புதிதாக உருவாகியுள்ள ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்க வேண்டும். அவருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று கோரியுள்ளது.
இதுதொடர்பாக இன்று நேரில் அப்துல் கலாமை சந்தித்து இந்த அணித் தலைவர்கள் கோரிக்கை விடுக்க திட்டமிட்டனர். இதற்காக இன்று ஜெயலலிதா டெல்லி செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களை சந்திக்க மாலை 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கினார் கலாம். இந்த நிலையில் திடீரென தனது டெல்லி பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்து விட்டார். உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் அவர் டெல்லி செல்ல மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை 10.10 மணிக்கு டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஜெயலலிதா, உ.பி. சகோதரி சசிகலா, வேலைக்காரச் சிறுமி, பாதுகாப்பு அதிகாரி, பி.ஏ. ஆகியோருக்கு டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருந்தன.
இசட் பிரிவு பாதுகாப்பில் ஜெயலலிதா இருப்பதால் விமான நிலையத்திலும் காலை முதலே பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. ஆனால், 9 மணியளவில் தான் தனது பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்தார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டன.
உடல் நிலையை காரணமாகச் சொன்னாலும் ஜெயலலிதா டெல்லி செல்லாததற்கு வேறு சில காரணங்கள் கூறப்படுகின்றன.
முட்டல் மோதல்:
மூன்றாவது அணியில் தலைவர்களுக்கு இடையே முட்டல் மோதல்கள் ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் தனது டெல்லி பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்தார் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணியின் தலைவராக தன்னைத் தேர்ந்தெடுப்பதில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில தலைவர்கள் (சந்திரபாபு நாயுடு?) விரும்பவில்லை என்பதால் ஜெயலலிதா அப்செட் என்கிறார்கள்.
ரஜினி-நாயுடு கைகோர்ப்பு-ஜெ டென்சன்:
மேலும ரஜினிகாந்த்தை அரசியலுக்கு இழுக்கவும் தனது கூட்டணிக்குள் இழுக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. ஹைதராபாத்தில் சிவாஜி படத்தைப் பார்த்த நாயுடு, பகிரங்கமாகவே ரஜினிக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் சென்னைக்கு வந்திருந்தபோது ஜெயலலிதா வீட்டிலிருந்து நேராக ரஜினி வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். நாயுடுவின் இந்தப் போக்கும் ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் லேசாக விரிசல் விழ ஆரம்பித்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications