கொழும்பு விமான நிலையத்தில் மீண்டும் நைட் சர்வீஸ்
கொழும்பு:கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் இரவு நேர விமான சேவையை தொடங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த மே மாதம் விடுதலைப் புலிகள் தங்களது வான்புலிகள் விமானப் படை மூலம் இலங்கை அரசை நிலை குலைய வைத்தனர்.
கொழும்பில் உள்ள கட்டுநாயகே விமானப்படைத் தளம் மற்றும் பலாலி விமான தளத்தில் தங்களது இலகு ரக விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இன்று வரை பகலில் மட்டுமே விமானங்களை இயக்கி வருகிறது இலங்கை அரசு.
இந்த நிலையில், தற்போது மீண்டும் இரவு நேர விமான சேவையை தொடங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து அதிபர் ராஜபக்ஷேவின் செய்தித் தொடர்பாளர் சந்திரபாலா லியநாயகே கூறுகையில், பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இறவு நேர விமான சேவையை மீண்டும் தொடங்கும் முடிவு நேற்று எடுக்கப்பட்டது.
மூத்த அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இன்னும் சில தினங்களில் இரவு நேர விமான சேவை தொடங்கும் என்றார்.
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தற்போது அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications