மதுரை மாஜி திமுக மேயர் வீடு மீது பெட்ரோல்குண்டு வீச்சு: கார் சாம்பல்- 9 அதிமுகவினர் கைது
மதுரை:மதுரையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் குழந்தைவேலு வீட்டில் இன்று அதிகாலை சிலர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது டாடா சுமோ கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
மதுரை மேற்குத் தொகுதியில் வருகிற 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரசாரம் படு வேகம் பிடித்துள்ளது.
காங்கிரஸுக்கு ஆரவாக திமுகவினர் முழுமையாக களம் இறங்கியுள்ளனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்கு கேட்பதாக திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இன்று அதிகாலை முன்னாள் திமுக மேயர் குழந்தைவேலு வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைவேலுவின் வீடு அண்ணா நகரில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் சிலர் டாடா சுமோ காரில் (10 பேர் என்று குழந்தைவேலு கூறுகிறார்) வந்துள்ளனர். வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளனர்.
இதில் படுக்கை அறை ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறியது. அதிர்ந்து போன குழந்தைவேலு வேகமாக வெளியே வந்து பார்த்தார். அப்போது போர்ட்டிக்கோவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது டாடா சுமோ கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
அதற்குள் சுமா காரில் வந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார் குழந்தைவேலு. இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் எரிந்து விட்டது.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி தலைமையில் அமைச்சர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தேர்தல் பார்வையாளர் அஜய் தியாகியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
தேர்தலை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இந்த செயலைச் செய்துள்ளனர் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
கார் எரிப்பு சம்பவத்தால் மதுரை மேற்கு தொகுதி மட்டுமல்ல மதுரை மாநகரமே பரபரப்பில் தகித்துக் கொண்டுள்ளது.