முல்லைப் பெரியாறு: தமிழகம், கேரளாமீண்டும் பேச பிரதமர் உத்தரவு
டெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு உடன்பட கேரள அரசு மறுத்து விட்டது. அணையின் உயரத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒன்றுமில்லாமல் செய்யும் வகையில் கேரள அரசு சட்டம் ஒன்றையும் இயற்றியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையினரை நிறுத்த உத்தரவிடக் கோரியும் தமிழகம் மனு செய்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் தமிழக, கேரள முதல்வர்கள் கூடிப் பேசினர். அக்கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து இரு மாநில அமைச்சர்கள் கூடி பேசினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிதாக ஒரு அணையைக் கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான பூர்வாங்க ஆய்வுப் பணிகளையும் அது மேற்கொண்டது.
இந்தப் பின்னணியில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சமீபத்தில் கேரள எம்.பி. பிரான்சிஸ் ஜார்ஜ் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசி உதவிடுமாறு கோரினார். இதைத் தொடர்ந்து இரு மாநில அரசுகளும் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
விரைவில் இரு மாநில அரசுகளின் சந்திப்புக்கு நீர்வளத்துறை ஏற்பாடு செய்யும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications