பண பட்டுவாடா: மதுரை இடைத் தேர்தலைஒத்தி வைக்க ஆணையம் முடிவு??
மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுக, அதிமுக ஆகியவை பணம் தந்து வருவதால் தேர்தலை ஆணையம் ஒத்தி வைக்கலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த தொகுதியில் சிலர் தங்கள் பண பலத்தை பயன்படுத்தியும் பணம் கொடுத்தும் வாக்குகள் பெற முயற்சிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதனால் மாவட்ட ஆட்சியர் சுந்தரமூர்த்தி, தொகுதி தேர்தல் அலுவலர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆகியோர் குழு அமைத்து விசாரித்து வருகின்றனர்.
காவல் துறையினருக்கும் விழிப்புடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டியதையும், வேட்பாளர்களின் புகார்களையும் கவனத்தில் கொள்வோம்.
70 சதவீத வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆதரங்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்தால் அதனையும் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.
வாக்காளர்களும் இதுகுறித்து புகார் அளிக்க முன் வர வேண்டும். இடைத் தேர்தல் தொடர்பாக வந்துள்ள புகார்களையும், தேர்தல் பார்வையாளர்களுடன் பேசிய விவரங்கள், தொகுதியின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க இருக்கிறேன்.
அதன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். அதுகுறித்து தற்போது நான் எதுவும் கூற முடியாது.
தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், இந்திய குற்றவியல் சட்டபடியும் குற்றச் செயல்.
நியாயமான முறையில் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. வன்முறை நடைபெறும் நிலை உள்ளது. எனவே தேர்தல் நடக்குமா என கேட்கிறீர்கள்.
இதற்கு பதிலளிப்பது சிரமம். இங்கு நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆணையத்திற்கு தெரிவிப்போம், ஆணையம் தான் இதுபற்றி முடிவெடுக்கும் என்றார்
தேர்தல் நடக்குமா என்பது குறித்து பதிலளிப்பது சிரமம் என நரேஷ் குப்தா கூறியுள்ளதால் மதுரை இடைத் தேர்தல் திட்டமிட்ட நாளில் நடப்பது சந்தேகமே எனத் தெரிகிறது.
வீட்டுக்கு ரூ. 1,500யை கவரில் போட்டு கொடுத்து வருகின்றனர் திமுகவினர்.
அதே போல கல்யாண மண்டபங்களில் செட்-அப் காது குத்து நிகழ்ச்சிகள் நடத்தி வாக்காளர்களை வரவழைத்து பிரியாணி போட்டு, கையில் பணக் கவர்களை கொடுத்து வருகின்றர் அதிமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் பார்த்து நொந்தபடி பிரச்சாரம் செய்து வருகின்றனர் தேமுதிக மற்றும் பாஜக வேட்பாளர்கள்.












Click it and Unblock the Notifications