கலாமை சந்தித்தார் மன்மோகன் சிங்
டெல்லி:குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், அவரை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடது சாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீல் நிறுத்தப்பட்டுள்ளார். சுயேச்சையாக துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக புதிதாக உருவாகியுள்ள ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் அப்துல் கலாமுக்கு மீண்டும் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. கலாமை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து களத்தில் நிறுத்தினால் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கலாமை ஆதரிக்கும் என்று பாஜக கூறியுள்ளது.
இதேபோல மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் கலாமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்துள்ளது.
கலாமுக்கு பல்வேறு கட்சிகளிடமிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில், தங்களது வேட்பாளரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதேபோல இடதுசாரிகளும், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. தமிழக முதல்வர் கருணாநிதியோ, 3வது அணியை ஜோக்கர்களின் அணி என்று விமர்சித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று மாலை திடீரென குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் நேற்றைய சந்திப்பு நடந்தது. கலாமும், மன்மோகன் சிங்கும் சுமார் 25 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் எஸ்.எம். கான் வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனியில் நடந்த ஜி 8 மாநாட்டில் பங்கேற்றது குறித்து கலாமிடம், மன்மோகன் சிங் விவரித்தார்.
ஊரக வளர்ச்சி குறித்தும் கலாமும், மன்மோகன் சிங்கும் விவாதித்தனர். தேசிய பொதுப் பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக இருவரும் பேசினார்களா என்பது குறித்து கான் வெளியிட்ட அறிக்கையில், எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அது குறித்தும் இரு தலைவர்களும் பேசியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.