பீர் குடிப்பதில் தென்னிந்தியா சூப்பர்!
புதுடெல்லி: பீர் குடிப்பதில் நாட்டிலேயே தென்னிந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 13.27 கோடி கேஸ் பீர் விற்பனையாகியுள்ளது. இதில் பெருமளவில் குடித்துக் காலி செய்தவர்கள் தென்னிந்தியர்கள்தான்.
கடந்த 2005-06ம் ஆண்டு 10.43 கோடி கேஸ் பீர்கள் விற்கப்பட்டன. 2006-07ம் ஆண்டு 13.27 கோடி கேஸ் பீர் விற்கப்பட்டு, அதன் மூலம் ரூ.10,000 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
வடஇந்தியாவில் 3.5 கோடி கேஸ் பீர் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தான் பீர் விற்பனை பிய்த்துக் கொண்டு போயுள்ளது. இங்கு மட்டும் 47 கோடி லிட்டர் பீர் விற்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மதிப்பு ரூ. 4000 கோடி ஆகும்.
இதுகுறித்து அகில இந்திய மதுபான சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், பீர் விற்பனை, ஏல முறையிலிருந்து லைசென்ஸ் முறைக்கு மாற்றப்பட்டதால் ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் விற்பனை அதிகரித்து வருகிறது.
பஞ்சாபில் பாட்டில் ரூ.20க்கும் குறைவாக உள்ளதால் அங்கு 50 சதவீதமும், ஹரியானாவில் 20 சதவீதமும் விற்பனை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
கடும் வெயில் காரணமாகத்தான் பீர் விற்பனை கிடுகிடுவென அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியா தவிர, ஒரிஸா, மேற்கு வங்கம், டாமன், டையூ மற்றும் சில்வாசா பகுதிகளிலும் அதிக அளவில் பீர் விற்பனையாகியுள்ளது.












Click it and Unblock the Notifications