தமிழரான கலாமை திமுக-பாமக ஆதரிக்க மறுப்பதுஏன்?: பாஜக, மூன்றாவது அணி கிடுக்கிப்பிடி
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் தமிழரான கலாமை திமுகவும் பாமகவும் ஆதரிக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் ஜனாதிபதி வேட்பாளரான பைரோன் சிங் ஷெகாவத் கலந்து கொள்வார் என பாஜக அறிவித்துள்ளது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ்,
அப்துல் கலாமை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. இதுகுறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலுள்ள திமுக, பாமக ஆகிய கட்சிகள் தங்கள் தெளிவான நிலையை அறிவிக்க வேண்டும்.
தமிழரான கலாமுக்கு அவர்கள் ஆதரவு தருவதாக இருந்தால் காங்கிரசும் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார்.
அதே போல மூன்றாவது அணியின் முக்கிய தலைவரும் சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளருமான அமர் சிங் கூறுகையில்,
தமிழரான கலாமை திமுக ஆதரிக்க மறுப்பது ஏன் என்பதை முதலில் விளக்க வேண்டும். நாங்கள் பாஜக, இடதுசாரிகள், காங்கிரஸ் என அனைத்துத் தரப்பிடமும் கலாமுக்காக ஆதரவு கேட்டு வருகிறோம். திமுகவும் கலாமை ஆதரிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications