குறி கேட்கச் சென்ற பெண்ணைக் கடத்திய சாமியார்
திருச்சி:திருச்சி அருகே குறி கேட்கச் சென்ற இடத்தில் இளம் பெண்ணைக் கடத்திச் சென்றார் சபலச் சாமியார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம், தெப்பக்குளம் பகுதியில், முருகேசன் என்பவர் இருக்கிறார். இவர் மாந்த்ரீகம், மை வித்தை, குறி சொல்வது என்று சாமியார் போல செயல்பட்டு வந்துள்ளார்.
இவரிடம் குறி கேட்க பெரும் கூட்டம் கூடுமாம். இந்த நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது மனைவி ராதா, மகள் லீலாவதியோடு அங்கு சென்று குறி கேட்டார்.
மகளுக்குத் திருமணம் நடப்பது தாமதம் ஆகிறது, அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று முருகேசனிடம் குறி கேட்டுள்ளார் சேகர். அப்போது லீலாவதியைப் பார்த்த முருகேசன் அவரது அழகில் மயங்கியுள்ளார். சாமியாருக்கு சபலம் தட்டியுள்ளது.
இந்த நிலையில் நேற்று லீலாவதி திடீரென காணாமல் போய் விட்டார். பதட்டமான பெற்றோர் பல இடங்களில் தேடியும் லீலாவதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் லீலாவதியை தனது காதல் வலையில் வீழ்த்தி, ஆசை வார்த்தைகளைக் கூறி முருகேசன் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் சேகர். அதன் பேரில் சபலச் சாமியார் முருகேசனையும், லீலாவதியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications