மதுரை இடைத் தேர்தல்: மீண்டும் புகுந்துவிளையாடும் பணம்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் மீண்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இடைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ரூ. 1,500 வரை வீடு வீடாக கொடுத்தது திமுக. அதே போல காது குத்து விஷேசம் நடத்தி கையில் ரூ. 1,000 ரூபாய் பிளஸ் வாயில் பிரியாணியை திணித்தது அதிமுக.
பின்னர் இரு கட்சிகளும் பரஸ்பரம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தன. விசாரணையில் பணம் தந்தது உறுதியானதால் தேர்தலையே ஒத்தி வைக்கலாமா என்ற மூடுக்கு ஆணையம் வந்துள்ளது.
இதையடுத்து இரு நாட்களாக கொஞ்சம் அடங்கிய கரை வேட்டிகள் மீண்டும் களத்தில் குதித்துவிட்டன. மீண்டும் ரூ.500 கரன்சிகள் களத்தில் இறங்கிவிட்டன. வீடு வீடாக சென்று இரு தரப்பும் பணம் தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆனால் சில பகுதிகளில் பணத்தை வாங்க மக்கள் மறுத்த சம்பவங்களும் நடந்துள்ளன.
மேலும் படைகள் வருகை
இந் நிலையில் இடைத் தேர்தலில் கூடுதல் பாதுகாப்பிற்காக மேலும் 6 கம்பெனி துணை ராணுவப் படைகள் மதுரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் தமிழக சிறப்பு காவல் படையினர், போலீஸார் என 4,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20 இடங்கள் மிக பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
திமுகவினரும், அதிமுகவினரும் ஒரு பக்கம் பணம் தந்து வருவதோடு மறு புறம் அடிதடியிலும் இறங்கி தேர்தல் களத்தை ரணகளமாக்கி வருகின்றனர். அரிவாள் வெட்டு, கார் எரிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் தொகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
வாக்குப் பதிவு வரும் 26ம் தேதி நடக்கவுள்ளது. வாக்கு எண்ணும் பணி மதுரை மருத்துவ கல்லூரியில் நடக்கவுள்ளது. இங்கு ஆயுதம் தாங்கிய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications