ரூ. 14 கோடியில் அழகாகிறது மெரீனா!
சென்னை:உலகின் 2வது நீளமான கடற்கரை என்ற பெருமை பெற்ற சென்னை மெரீனா கடற்கரையை ரூ. 14 கோடியில் அழகுபடுத்தும் திட்டத்தை சென்னை மாநராட்சி தீட்டியுள்ளது.
உலகின் 2வது நீண்ட கடற்கரை (முதல் கடற்கரை ரியோடி ஜெனீரோ கடற்கரை) என்ற பெருமை சிங்கராச் சென்னையின் மெரீனா கடற்கரைக்கு உண்டு. ஆனால் அந்தப் பெருமையெல்லாம் வெறும் பெயரளவிலேயே உள்ளது.
எங்கு பார்த்தாலும் குப்பை, கடைகளின் ஆக்கிரமிப்பு என மெரீனாவின் கடற்கரை மறைக்கப்பட்டு அசுத்தமாகிக் கிடக்கிறது. இந்த நிலையில், மெரீனாவை அழகுபடுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தீட்டியுள்ளது.
கடற்கரைக்குச் செல்ல புதிய பாதைகள், சர்வீஸ் பாதைகள், கண்ணைக் கவரும் புல்வெளிகள், கடற்கரைக்கு வருவோருக்காக அழகான இருக்கைகள் என அமர்க்களப்படுத்த திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்காக ரூ. 14 கோடியில் புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கடற்கரை அழகுபடுத்தப்படும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள வாகன நிறுத்துமிடம், புல்வெளிகள், நடைபாதைகள், சர்வீஸ் பாதைகள் புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்தப்படும். இந்த திட்டத்திற்கான டெண்டர் ஏற்கனவே விடப்பட்டு விட்டது.
கடற்கரை மணலை அசுத்தமில்லாமல் பளிச்சென வைப்பதற்கான திட்டம் தனியாக செயல்படுத்தப்படவுள்ளதாம்.












Click it and Unblock the Notifications