கவர்னர் பதவி-இன்று ராஜினாமா செய்கிறார் பிரதீபா
டெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல், இன்று தனது ஆளுனர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல், அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட, வரும் 23ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருக்கிறார்.
இதையடுத்து தனது ராஜஸ்தான் மாநில ஆளுனர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இதற்காக ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் அப்துல் கலாமை சந்திக்கிறார்.
![]() |
பின்னர் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இப்போது முக்கிய அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வரும் பிரதீபா முன்னாள் பிரதமரும் ஜன மோர்சா தலைவருமான வி.பி.சிங்கை சந்தித்து பேசினார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பிய கரன் சிங்கையும் சந்தித்தார்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரையும் சந்தித்து தனக்கு ஆதரவு கோரினார்.
இவருடைய வேட்பு மனுவை முன்மொழிந்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் கையெழுத்திட்ட நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி மற்றும் ராஷ்ட்ரீய லோக் தள் தலைவர் அஜீத் சிங்கும் கையெழுத்திட்டார்.
கலாமுக்காக நெல்லையில் போராட்டம்:
இந் நிலையில் ஜனாதிபதியாக அப்துல் கலாமையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரி திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன் கூடி கோஷமிட்டனர்.
இதற்கிடையே அப்துல் கலாம் ஜனாதிபதி பதவிக்கு எவ்வகையில் பொருத்தமானவர் என்பதை விளக்க நாடெங்கும் பல அமைப்புகள் சிடிக்களை வெளியிட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் அழைப்பு:
கலாம் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 10ம் தேதி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்ட நடத்த வேண்டும். அன்றைய தினம் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி நாடெங்கும் இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ்கள் பரவி வருகின்றன.













Click it and Unblock the Notifications