ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு:பாஷா விடுதலை-11 பேருக்கு தண்டனை
சென்னை:சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 11 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவர்களில் பழனிபாபா கொலை செய்யப்பட்டு விட்டார். இமாம் அலி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். ஒருவர் தலைமறைவாக உள்ளார்.
சென்னை தடா நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை முடிவடைந்து தீர்ப்பு இரு முறை (மே 9, ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ராமசாமி இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி எஸ்.ஏ.பாஷா, முக்தார் அகமது, அமினுதீன் ஷெரீப், முகம்மது அப்துல் அஸ்லம் ஆகியோர் ஏற்கனவே சிறையில் காலத்தை கழித்து விட்டதால் அவர்களை விடுவிப்பதாக அறிவித்தார்.
அபுபக்கர் சித்திக், ஹைதர் அலி, காஜா நிஜாமுதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனைய விதித்தார்.
சஹாபுதீன், அப்துல் ரஹீம், அகமது ஞானியார், முகம்மது மூஸா, புஹாரி, முகம்மது அலி, முகம்மது சுபேர் ஆகிய 7 பேருக்கு தலா 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
ரபீக் அகமதுவுக்கு 3 ஆண்டு தண்டனை விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
தீர்ப்பையொட்டி தடா நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications