கலாமுக்கு ஆதரவில்லை: சோனியா, இடதுசாரிகள் திட்டவட்டம்- 3வது அணி முயற்சிகள் தோல்வி
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பாட்டீல்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அப்துல் கலாமுக்கு ஆதரவு கேட்டு 3வது அணியினர் என்னை சந்திக்க வர வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை வேட்பாளராக அறிவித்த 3வது அணியினர், அவருக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் தன்னை சந்திக்க வர வேண்டாம் என சோனியா காந்தி கூறியுள்ளார். எங்கள் அணியின் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார்.
அதே போல கலாமுக்கு ஆதரவு கோரி சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமர்சிங் உள்ளிட்ட தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத்தை இன்று சந்தித்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். நாயுடு பேசுகையில்,
தாமதமான கோரிக்கை இது என்று பிரகாஷ் காரத் கூறினார். இருப்பினும் இதுகுறித்து கட்சித் தலைவர்களுடன் பேசுவதாக தெரிவித்தார். அப்துல் கலாமுக்கு ஆதரவாக உள்ள மக்களின் கருத்தையும், நாட்டின் மன ஓட்டத்தையும் காரத்திடம் தெரிவித்தோம். அவர் அதை பொறுமையுடன் கேட்டுக் கொண்டார் என்றார்.
ஆனால், அவர்களது கோரிக்கையை மார்க்சிஸ்ட் பின்னர் நிராகரிப்பதாக அறிவித்துவிட்டது.
இதைடுத்து மூன்றாம் அணித் தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களான பரதன மற்றும் ராஜாவை சந்தித்து பேசினர்.
அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த பரதன் நிருபர்களிடம் கூறுகையில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் பிரதீபா பாட்டீலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை. தோல்வியை கண்டு அச்சப்படுகிறவர்கள் வீணான குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது பலனற்று போகும் என்றார்.
அதே போல பாஜக தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து 3வது அணியினர் கலாமுக்கு ஆதரவு கேட்டனர். பாஜக தலைவர்களுடன் ஆலோசிதித்து கூறிவதாக கூறினர்.
பாஜக கூட்டணித் தலைவர்களை இன்று மீண்டும் சந்திக்கவும் மூன்றாவது அணித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் சுயேட்சை மற்றும் மற்ற சிறிய கட்சித் தலைவர்களிடமும் 3வது அணியினர் தொலைபேசி மூலம் ஆதரவு கேட்டனர்.
இன்று மாலை இவர்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் மூன்றாவது அணித் தலைவர்கள்சந்தித்து பேசவுள்ளனர்.
மேலும் ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவையும் அவர்கள் சந்திக்கின்றனர்
இவர்களின் இந்த விறுவிறுப்பான நடவடிக்கையால் காங்கிரஸ் அச்சமடைந்துள்ளது. இதனால் கட்சியின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாநில காங்கிரஸ் முதல்வர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இச் சூழ்நிலையில் மக்களின் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ள அப்துல் கலாம், அரசியல்வாதிகளின் ஜனாதிபதி என்ற பெயரைப் பெற விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் உறுதியாக கூறப்படுகிறது.
3வது அணித் தலைவர்கள் தனது பெயரை ஆதரித்து, கட்சிகளிடம் ஆதரவு தேடிக் கிளம்பியிருப்பதைக் கண்டு அப்துல் கலாம் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது.
3வது அணியும், பாஜக கூட்டணியும் சேர்ந்து ஆதரித்தாலும் கூட கலாமுக்கு வெற்றி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications