கலாமை அவமானப்படுத்திவிட்டது 3வது அணி-கருணாநித
சென்னை:
2006ம் ஆண்டே கலாமை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் நிற்குமாறு நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், அதை அவர் அப்போதே மறுத்துவிட்டார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளரை அறிவித்து அவருக்கு ஆதரவு திரட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடங்கியுள்ள முயற்சியை ஆதிக்க வெறி கொண்டவர்கள் ஆதரித்துத் தான் ஆக வேண்டும் என்று நம்மவர்கள் யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
ஆனால், மூத்த தலைவர்கள் கூடியெடுத்த முடிவை மிகக் கேவலமாக விமர்சிக்கவும், கேலி செய்யவும் முனைந்துள்ளவர்களின் போக்கினைக் கண்டு சிரிப்பும் வருகிறது, சீற்றமும் வருகிறது. சிரிப்பை அடக்கிக் கொண்டு சீற்றத்தையும் தவிர்த்து சிந்தனைக்கு இடமளித்தால் சில உண்ைமகள் பேருரு எடுக்கும்.
பிரதீபா பாட்டீல் வேட்பாளர் நமது வேட்பாளர் என்று அறிவித்ததை ஜோக் என்று ஆணவத்துடன் விமர்சிக்க ஐந்தாறு பிரபல தலைவர்கள் சென்னையில் மூன்றாவது அணியாக கூடினார்கள் என்றால், அடடா.. என்ன நாகரீகம்.. என்ன அரசியல் பண்பாடு, என்ன ஒரு ஜனநாயக மேம்பாடு.. நமது கூட்டணியை ஹூயூமர் கிளப் என அவர்களில் ஒருவர் விமர்சித்துள்ளார்.
பல பெயர்களை பரிசீலித்து கடைசியாகத்தான் பிரதீபா பாட்டீலின் பெயரை அறிவித்ததாக.. ஏதோ அதிசயத்தை கண்டவர்கள் போல எழுதுகிறார்கள், செய்தி வெளியிடுகிறார்கள்.
எந்த ஒரு தேர்தல் என்றாலும் வேட்பாளர் யார் என்பதை ஒருமுறைக்கு பல முறை யோசித்து, பரிசீலிப்பது தான் பொறுப்புடையவர்களின் செயல். அந்தப் பரிசீலனை தான் இப்போதும் நடந்தது. இறுதியாக இந்தியாவின் முதன் பெண்மணியாக முதன் முறையாக ஒரு பெண்மணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதை எந்த வகையில் ஜோக் வரிசையில் வைத்தார்கள் என்பதை வசவாளர்கள் விளக்கிட வேண்டும்.
சரி, இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவியில் அமர்ந்திட தனக்கு விருப்பமே இல்லை, மீண்டும் கல்விப் பணியாற்றுவதில் தான் அக்கறையோடு இருப்பதாகவும் கூறி, மறுத்துரைத்த மாமனிதர் அப்துல் கலாமை, இப்போது மூன்றாவது அணியினர் வேட்பாளராக அறிவிக்கிறோம் என்று கூறி, அவர் ஒப்புதலுக்காக டெல்லியில் படையெடுத்துள்ளனர்.
அவரோ வெற்றி உறுதி என்றால் பரிசீலிப்பேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இந்திய நாட்டின் மூத்த குடிமகனை தங்கள் அணியின் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு முன்பே, அவருடைய சம்மதத்தை மறைமுகமாகவாவது பெற்றுக் கொள்ளாமல், ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அவரை ஆளாக்கி, அவரை அதற்கு பதில் சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தியன் மூலம் அந்த அணியினர், இந்திய நாட்டு மாணவ சமுதாயத்தின் பேரன்பிற்குரியவரான அந்த மாமனிதரை அவமானத்திற்கு ஆட்படுத்தியிருக்கிறார்கள்.
அவரை வேட்பாளர் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தவரே (ஜெயலலிதா), அவரை அதற்கு சம்மதிக்க வைக்க நேரடியாக செல்லாமல் புறக்கணித்தது எல்லாவற்றையும் விட அநாகரீகமான செயல்.
நான் இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். 2006ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நான் டெல்லி சென்றிருந்தபோது, நானும் மத்திய அமைச்சர் ராஜாவும் கலாமை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் நிற்குமாறு நானே நேரில் கேட்டுக் கொண்டேன். அவர், மீண்டும் அந்தப் பதவியை விரும்பவில்லை என்றும், பழையபடி மாணவர்கள், கல்வி நிலையங்கள் போன்ற அறிவியல் வளர்ச்சிப் பணிகளிலேயே வாழ்நாளை கழிக்க விரும்புவதாக திட்டவட்டமாக என்னிடம் தெரிவித்துவிட்டார்.
தான் வகித்த அந்த பெரும் பதவியில் நீடிக்க அவருக்கு அறவே பற்று பாசமில்லை என்பதை உணர்ந்து, பலரிடமும் அந்தப் பெருந்தன்மையை பாராட்டி, மகிழ்ந்து, புகழ்ந்திருக்கிறேன்.
ஆனால், இப்போது இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், அதுவும் சோனியா காந்தியின் வழிகாட்டுதலைப் பெற்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்வு செய்த வேட்பாளரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, எந்த வேட்பாளரை அப்துல் கலாமே அற்புதமான வேட்பாளர் என்று அக மகிழ்ந்து புகழ்ந்துரைத்தாரோ,
அவருக்குப் போட்டியாக அதே அப்துல் கலாமை நிறுத்த முயற்சிக்கிறோம் என்று படை திரட்டுவது, பதை தீர்க்கும் மனப்பாங்கினைத் தான் காட்டுகிறதே அல்லாமல், கலாமின் அறிவுச் செழுமைக்கும், விஞ்ஞான வித்தகத்திற்கும், மூன்றாம் அணியினர் காட்டுகிறது மரியாதை ஆகாது.
இவர்களை புரிந்து கொண்டிருக்கும் அப்துல் கலாம் இந்த உண்மைகளையும் புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன்.
அவரைப் பற்றி, அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது அவரை வாழ்த்தி நான் எழுதிய கவிதையின் சில வரிகளை நினைவுகூற விரும்புகிறேன்.
ராமஸ்வரம் கடற்கரையில் மோதுகின்றஅலைகள் கூட இன்று மலையளவு உயர்கின்றன,
மகிழ்ந்து கூத்தடிக்கின்றனநடுக்கடலில் காற்றழுத்தத்தின் விளைவு எனநானும் நீயும் கருதினால், அது தவறு!
நாள்தோறும் கேட்கும் கடல்பாட்டல்ல இதுஅலைகள் நடனம் அனுதினமும் கண்டுள்ளோம்!
அற்புதமாய் இன்று மட்டும் இந்த ஆனந்தக் கூத்து ஏன்?
மன்பதை ஆளும் விஞ்ஞானம்-இந்திய மாநாட்டையும் ஆளப் போகிறதென் மகிழ்ச்சியின் துள்ளலே
இதோ மணல் மீது அலையின் நடனம்!
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications