ஆந்திராவில் கரை கடந்தது புயல்:தமிழகத்தில் தொடர்கிறது கன மழை
சென்னை:வங்கக் கடலில் விசாகப்பட்டிணம் அருகே நிலை கொண்டிருந்த புயல் இன்று காலை காக்கிநாடாவில் கரையைக் கடந்தது. இதையடுத்து ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல தமிழகத்திலும் தொடர்ந்து ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக குமரி மாவட்டத்திலும் நேற்று முதல் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது ஆந்திராவில் ராயலசீமா, தெலுங்கானா பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று அதிகாலையில், காக்கிநாடா அருகே புயல் கரையைக் கடந்தது. அந்த சமயத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழையும் பெய்தது. ராயலசீமா, தெலுங்கானா பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
கடல் கொந்தளிப்பும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருந்தது. புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வந்த மழை இன்று காலை ஓய்ந்தது. இன்று காலை லேசாக வெயில் எட்டிப் பார்த்தது. இருப்பினும் ஆங்காங்கு சிறு தூறல் மழை இருந்து வருகிறது.
முன்னதாக சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் நகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளக் காடாகின. பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் அடைமழை:
இந் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5வது நாளாக இன்றும் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் இம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோட்டார், ஈச்சங்காடு, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
கன மழையோடு சூறாவளிக் காற்றும் வீசி வருவதால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து விவசாயிகளை சோகத்தில் தள்ளியுள்ளன.
கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தின் ஏரிகள், குளங்களும் நிரம்பி வழிகின்றன.












Click it and Unblock the Notifications