சுனிதா நலமுடன் திரும்ப யாகம்!
மீரட்: விண்ணிலிருந்து பூமியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று வேண்டி இந்தியாவின் வட பகுதிகளில் யாகம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்கள், அட்லாண்டிஸ் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.இன்று இரவு 11 மணிக்கு அவர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. அட்லாண்டிஸ் விண்கலம் பத்திரமாக தரையிறங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் கென்னடி மையம் உள்ள பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்திருப்பதால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் திட்டமிட்டபடி 11 மணிக்கு அட்லாண்டிஸ் தரையிறங்காது என்று கூறப்படுகிறது. 11.30 அல்லது நள்ளிரவைத் தாண்டி 1 மணிக்கு அட்லாண்டிஸ் தரையிறங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை கென்னடி மையத்தில் அட்லாண்டிஸ் இறங்க முடியாத நிலை ஏற்பட்டால், கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அட்லாண்டிஸை தரையிறக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது.
தரையிறங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டாலும் கூட ஞாயிற்றுக்கிழமை வரை விண்ணில் நிலை கொண்டிருக்கும் வகையில், அட்லாண்டிஸில் அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டவர்கள் பத்திரமாக தரையிறங்க வேண்டும் என்று வேண்டி வடஇந்தியாவின் பல பகுதிகளில் பிரார்த்தனைகள், யாகம், சிறப்புப் பூஜை ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
உ.பி. மாநிலம் மீரட் நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications