மீண்டும் போட்டி இல்லை-கலாம் அறிவிப்புநேரடிப் போட்டியில் பிரதீபா-ஷெகாவத்
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவித்துள்ளார். இதையடுத்து கலாமை மையப்படுத்தி கடந்த சில நாட்களாக நடந்து வந்த அரசியல் விளையாட்டு முடிவுக்கு வந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமையே மீண்டும் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள், டெல்லி சென்று கலாமை சந்தித்துப் பேசினர்.
தன்னை சந்தித்த தலைவர்களிடம், வெற்றி நிச்சயம் என்று உறுதியான நிலை நிலவினால் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயார் என்று தெரிவித்தார் கலாம்.
இதையடுத்து இடது சாரித் தலைவர்களை மூன்றாவது அணியின் தலைவர்கள் சந்தித்து ஆதரவு கோரினர். ஆனால் பிரதீபா பாட்டீல்தான் எங்களது வேட்பாளர், கலாமை ஆதரிக்க முடியாது என்று திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து 3வது அணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் அப்துல் கலாமை 3வது அணியின் தலைவர்கள் சென்று சந்தித்தனர்.
அப்போது தான் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார் கலாம். குடியரசுத் தலைவர் மாளிகையை முன்னிலைப்படுத்தி அரசியல் விவாதம் நடைபெறுவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் 3வது அணி தலைவர்களிடம் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்காக தான் பாடுபட நினைப்பதாகவும், சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் தன்னால் அதைச் செய்ய முடியும் என்றும் கலாம் 3வது அணி தலைவர்களிடம் தெரிவித்தார்.
தனக்காக ஆதரவு கோரி தீவிர முயற்சிகள் எடுத்துக் கொண்டதற்காக 3வது அணித் தலைவர்களுக்கு கலாம் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
கலாம் திட்டவட்டமாக மறுத்து விட்டதால் 3வது அணியின் முயற்சிகளுக்கு முடிவு வந்துள்ளது. இதையடுத்து தற்போது பிரதீபா பாட்டீலும், பைரான் சிங் ஷெகாவத்தும் நேரடி போட்டியில் சந்திக்கும் நிலை உறுதியாகியுள்ளது.
கலாம் மறுத்து விட்டதால், 3வது அணியின் நிலை என்ன என்பதை அனைத்துத் தலைவர்களுடனும் விவாதித்து அறிவிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
கலாமுடனான சந்திப்புக்குப் பின்னர் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் நேராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்கு சென்றனர். அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசித்தனர்.
பின்னர் வெளியில் வந்த அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது 3வது அணி சார்பில் ஜெயலலிதா பேசுகையில், அப்துல் கலாமே மீண்டும் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்று மக்கள் விரும்பினர். ஆனால் சில சுய நல சக்திகள் அதைத் தடுத்து விட்டன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர்களான சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி ஆகியோர் மிகக் கடுமையான வார்த்தைகளில், மோசமான வார்த்தைகளில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை விமர்சித்துப் பேசியுள்ளனர்.
இந்த விமர்சனங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக அப்துல் கலாம் எங்களிடம் வேதனையுடன் தெரிவித்தார். மத்திய அமைச்சர்களின் கண்ணிமற்ற, அநாகரீகமான, தேவையற்ற பேச்சுக்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
இதுபோன்ற சர்ச்சையில் தான் இழுக்கப்பட விரும்பவில்லை என்றும், எனவே தான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றும் குடியரசுத் தலைவர் எங்களிடம் கூறினார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்துத் தலைவர்களும் ஆலோசித்து முடிவெடுப்போம். ஏற்கனவே கூறியபடி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரையோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரையோ நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications