சொத்து குவிப்பவர்களுக்கு பிரதீபாவின் முக்கியத்துவம் தெரியாது-கனிமொழி தாக்கு
மதுரை:தோட்டங்கள், பங்களாக்கள் என சொத்துக்களைக் குவித்து வருபவர்களுக்கு பிரதீபா பாட்டீலின் முக்கியத்துவம் குறித்து தெரியாது என்று கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான கவிஞர் கனிமொழி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் மு.க.அழகிரியன் மனைவி காந்தி, அமைச்சர் தமிழரசி, மதுரை மேயர் தேன்மொழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தனக்கே உரிய பாணியில் மென்மையான முறையில் பேசி வாக்கு சேகரித்த கனிமொழியின் பிரசார பாணி வாக்காளர்களைக் கவர்ந்தது.
வேனில் இருந்தபடி பிரசாரம் செய்த கனிமொழி ஆங்காங்கே வேனை நிறுத்தி கீழே இறங்கி வாக்காளர்களை நேரில் அணுகியும் வாக்கு கேட்டார். பெண்களிடம் கைகளை குலுக்கியும் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது கனிமொழி பேசுகையில், பிரதீபா பாட்டீலின் தேர்வை எதிர்க்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தாக்கிப் பேசினார்.
கனிமொழி பேசுகையில், பல வளர்ந்த நாடுகளில் கூட பெண் ஒருவர் ஜனாதிபதியாக இல்லை. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியும், இடதுசாரிகளும் சேர்ந்து இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளன.
இதை சில தலைவர்களால், குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நடவடிக்கையை புரிந்து கொள்ளாமல் அவர் குறை கூறுகிறார்.
முதல்வர் கருணாநிதி துணை ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படுகிறார் என்றும், எனக்கு அமைச்சர் பதவி வாங்கித் தர வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கூறிய பிரதீபா பாட்டீலை ஆதரிக்க முடிவு செய்தார் என்றும் ஜெயலலிதா கூறியிருப்பது மிகப் பெரிய ஜோக் ஆகும்.
பங்களாக்கள் கட்டுவதிலும், தோட்டங்களை வாங்கிக் குவிப்பதிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பெண் ஜனாதிபதியாக வருவது குறித்து நினைத்துப் பார்க்க முடியாதுதான். அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முக்கியத்துவத்தை உணர முடியாததுதான் என்றார் கனிமொழி.
தனது பிரசாரத்தின்போது பெண்கள் நலனுக்காக திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசினார் கனிமொழி.
கனிமொழி சென்ற இடமெல்லாம் ஆரத்தி எடுத்தும், முரசு கொட்டியும் திமுகவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications