சென்னையில் தொடரும் படுகொலைகள்பழ வியாபாரி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை:மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை தி.நகரில் நாவல் பழ வியாபாரியை நடு ரோட்டில் வைத்து ஒரு கும்பல் வெட்டிப் படு கொலை செய்தது.
சென்னை புறநகரான ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கர்ணன். இவர் தி.நகர் பனகல் பூங்கா அருகே தனது நண்பர் கிளைண்ட் என்பவருடன் சேர்ந்து நாவல் பழக் கடை வைத்திருந்தார்.
ஆனால் இந்தக் கடையை நடத்துவதற்கு அருகில் இருந்த பிற கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கும் கர்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே முன்விரோதம் நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் தனது கடையில் வியாபாரத்தில் இருந்தார் கர்ணன். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்து அவரிடம் தகராறு செய்தது.
பின்னர் அந்தக் கும்பல் திடீரென கர்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டத் தொடங்கியது. இதனால் அங்கிருந்து ஓடினார் கர்ணன். ஆனாலும் விடாத அக்கும்பல் கர்ணனை ஓட ஓட விரட்டி வெட்டித் தள்ளியது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பனகல் பூங்கா பகுதியில் நடு ரோட்டில் ஒருவரை துரத்தி துரத்தி வெட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து கிடந்த கர்ணனின் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்லப்பட்ட கர்ணனுக்கு பவானி என்கிற மனைவியும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர். சக வியாபாரிகள் இடையூறு செய்து வந்ததால் சில நாட்களுக்கு கர்ணன் வியாபாரத்துக்குப் போகாமல் இருந்து வந்தார்.
ஆனால் கிளைண்ட்டும், அவரது நண்பர் ராஜுவும் வந்து பிரச்சினை சரியாகி விட்டது என்று கூறி கர்ணனை மீண்டும் வியாபாரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் கர்ணன் கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை நகரில் நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சமீபத்தில் போலீஸார் ரவுடிகளை வளைத்து வளைத்துப் பிடித்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு கொலை, அதுவும் நகரின் முக்கியப் பகுதியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications