பஸ், கார் மோதலில் 6 பேர் பலி
சேலம்: சேலம் அருகே கார் மீது பேருந்து மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (75). இவர் தனது மனைவி சௌந்தரம், மகன்கள் வெங்கடசுப்ரமணியன், சுரேஷ் மற்றும் உறவினர்களுன் கோவையிலுள்ள தன் மகள் கீதா வீட்டிற்கு காரில் சென்றார்.
கீதாவின் மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்பதற்காக இவர்கள் சென்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பழைய அண்ணா போக்குவரத்துக் கழக பணிமனை அருகே கார் போய்க் கொண்டிருந்தது.
அப்போது, எதிரே ஈரோட்டிலிருந்து ஓமலூர் நோக்கிப் போய்க் கொண்டிருந்த தனியார் பேருந்து, கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
விபத்தில் சுந்தர்ராஜன், செளந்தரம், வெங்கடசுப்ரமணியன், சுரேஷ், கார் டிரைவர் மற்றும் ஒரு வயக் குழந்தை சாய் கணேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடசுப்ரமணியனின் மனைவி சங்கீதா உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேரும் காயமடைந்தனர். அனைவரும் ஈரோடு மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.