சிசேரியன் சர்ச்சை: டாக்டரிடம் மீண்டும் விசாரணை
திருச்சி:11வது வகுப்பு படிக்கும் மாணவன் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்த விவகாரம் தொடர்பாக அவனது தந்தையான மணப்பாறை டாக்டரிடம் இன்று 2வது முறையாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
![]() |
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன், காந்திமதி தம்பதியினரின் 15 வயதாகும், 11வது வகுப்பு படிக்கும் மகன் திலீபன் ராஜ், ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆர்.டி.ஓ. ரமணீதரன் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
ரமணீதரன், தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய குழு சில நாட்களுக்கு முன்பு டாக்டர் முருகேசனிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் நேற்று 2வது முறையாக மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று நடந்த விசாரணையின்போது முருகேசன், அவரது மனைவி டாக்டர் காந்திமதி, மகன் திலீபன் ராஜ் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் சிசேரியன் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்ட மதி சர்ஜிகல் மற்றும் மகப்பேறு மருத்துவமனை ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை வெளியுலகுக்குக் கொண்டு வந்த மணப்பாறை பிரிவு இந்திய மருத்துவர் சங்க நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சிசேரியன் செய்யப்பட்ட பெண் நீலாவிடமும் 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது. பின்னர் இக்குழுவின் உத்தரவின் பேரில் நீலாவுக்கு விராலிமலை அரசு மருத்துவமனையில் முழு உடற் பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்குப் பிறந்த குழந்தையும் கூட மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த விசாரணை குறித்து ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி கூறுகையில், அதிகாரிகள் குழு விரைவில் தங்களது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அதன் பின்னர் டாக்டர் தம்பதிகள் தவறு செய்திருப்பது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாரிகள் குழு அறிக்கை கொடுத்தவுடன் சட்ட நிபுணர்களிடம் கொடுத்து அவர்களின் ஆலோசனை பெறப்படும். அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.













Click it and Unblock the Notifications