ஜெ. பிரசாரத்தில் கல்வீச்சு, பதட்டம்
மதுரை:மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் கலந்து கொண்ட பிரசாரத்தின்போது அதிமுகவினரின் வேன் மீது சரமாரியாக கற்கள் வீசித் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மேற்குத் தொகுதியில் நேற்று 2வது கட்டமாக ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கரிமேடு பகுதியில் போஸ் தெரு என்ற இடத்தில் ஜெயலலிதாவுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வேன் மீது திமுகவினர் கற்கள் வீசித் தாக்கியதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா கூறுகையில், போஸ் தெரு பகுதியில் ஜெயலலிதாவின் கார் வந்தபோது, அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வேனை நோக்கி திமுக, காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.
அதேபோல, அழகரடி பகுதியில் ஜெயலலிதா பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது காங்கிரஸார் வேண்டும் என்று பெரும் கூட்டமாக வந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை. கொடுத்தால் போலீஸார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதால்தான் நாங்கள் புகார் தரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications