குடகில் கன மழை-நிரம்பும் அணைகள்மகிழ்ச்சியில் தமிழக விவசாயிகள்
மைசூர்:காவிரியின் பிறப்பிடமான குடகு பகுதியில் கன மழை கொட்டி வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தற்போது காவிரிப் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை கொட்டி வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இதேபோல காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள பிற அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணையில் அணையின் நீர் மட்டம் நேற்று வரை 67.32 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவு 124.8 அடியாகும். கன மழை காரணமாக இன்று அணையின் நீர்மட்டம் 80.30 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர் மட்டம் 95.65 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 52 ஆயிரத்து 859 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு இது வெறும் 250 கன அடியாக மட்டுமே இருந்தது.
இன்னும் சில நாட்களுக்கு இதே அளவில் நீர்வரத்து இருக்கும் என நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கபிணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 21 ஆயிரத்து 235 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 2266.11 அடியாக உள்ளது. அணையின் மொத்தக் கொள்ளளவு 2284 அடியாகும்.
இதேபோல காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 2820 அடியாக உள்ளது. மொத்தக் கொள்ளளவு 2859 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
கர்நாடக காவிரிப் பாசனப் பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதாலும், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பி வருவதாலும், தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும் நாளை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications