யார் காலிலும் விழ மாட்டேன்:விஜயகாந்த்
மதுரை:மக்கள் காலில் மட்டுமே விழுவேன், மற்ற யார் காலிலும் விழ மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று இறுதிக் கட்ட பிரசாரத்தில் தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரனை ஆதரித்து விஜயகாந்த் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். செல்லூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதாவும் சேர்ந்து கலந்து கொண்டார்.
கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், ஒருவர் ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளார். இன்னொருவர் 2 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. இவர்கள் தங்களது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கலாம். ஆனால் தங்களை நம்பாமல், காந்தி படம் போட்ட நோட்டுக்களைக் காட்டி வாக்கு கேட்கிறார்கள்.
1500 ரூபாயை அந்தக் காலத்தில் கொடுத்திருக்கலாம். ஆனால் இப்போது இருக்கிற விலைவாசிக்கு நீங்கள் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்தான் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.
அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் உண்மையான சாதனை. ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்.
நான் சினிமாக்காரன், மலைக்கு மலை தாவுகிறவன் என்று கேலி பேசுகிறார்கள். எனக்கு கட்சி நடத்த என்ன அருகதை உள்ளது என்கிறார்கள். அது சினிமா, கதைப்படி நான் தாவுகிறேன். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டணி என்ற பெயரில் நீங்கள் தாவுகிறீர்களே அதை விட இது கேவலம் இல்லை.
எனது கூட்டணி எப்போதும் மக்களுடன்தான், வேறு யாருடனும் நான் கூட்டணி சேர மாட்டேன். எனது கட்சிக்கு நான் முதல் எம்.எல்.ஏ. 2வது எம்.எல்.ஏவை இந்தத் தொகுதியிலிருந்து மக்கள் தர வேண்டும்.
ஒருவருக்கு குடும்பம்தான் கழகம், இன்னொருவருக்கு தோழிதான் கழகம். ஆனால் எனக்கு கழகம் மட்டுமே குடும்பம். நான் இருப்பதை இழந்து விட்டு ஓட்டு கேட்கிறேன். ஆனால் மற்றவர்கள் இல்லாததை சம்பாதித்து விட்டு ஓட்டு கேட்கிறார்கள்.
தனித் தனியாக நிற்க முடியுமா என்று நான் கேட்டதற்கு இதுவரை யாரும் பதிலே சொல்லவில்லை. உங்கள் துணை இருக்கும் வரை நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், மக்கள் காலில் மட்டுமே விழுவேன். வேறு யார் காலிலும் நான் விழ மாட்டேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications